திமுகவில் இருந்து விலகினார் கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் பாபு

Spread the love
கோவை மாநகராட்சியின் 22-வது வார்டு திமுக கவுன்சிலரான பாபு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், “இளைஞர்களுக்கும், எளிய பின்னணியில் உள்ளவர்களுக்கும் திமுகவில் உரிய வாய்ப்பு இல்லை. எனவே இனியும் கட்சியில் தொடர்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுடன் நானும், எனது நண்பர்களும் திமுகவிலிருந்து விலகுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “திமுக சாமானியர்களின் கட்சியாக இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனத்தைப் போல் செயல்படுகிறது. சாதாரண தொண்டர்கள் வாக்காளர்களாகவும் அடிமட்ட பணியாளர்களாகவும் மட்டுமே இருக்க முடிகிறது. மக்கள் சேவை செய்யும் பொறுப்புகளையோ, உயர்ந்த பதவிகளையோ அடைய முடியாத நிலை உள்ளது” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், கட்சியின் தலைமை அமைப்பு மற்றும் வாரிசு அரசியல் குறித்தும் விமர்சனம் முன்வைத்துள்ள பாபு, “இது சமூகநீதி கொள்கைக்கு முரணானது. திமுக முதலாளித்துவக் கட்சியாக மாறியுள்ளது” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

22-வது வார்டு கவுன்சிலரின் இந்த திடீர் விலகல், கோவை மாவட்ட திமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.