சைலென்சரில் மாற்றம் செய்கிறீர்களா? அரசு வேலை, பாஸ்போர்ட் எடுக்க முடியாது!

Spread the love

இருசக்கர வாகனங்களின் சைலென்சரில் மாற்றம் செய்து அதிக சப்தத்துடன் இயக்குவோர் மீது, குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்போவதாக, கோவை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

கோவை மாநகரில் 332 மாற்றம் செய்யப்பட்ட சைலன்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில், ரோடு ரோலர் பயன்படுத்தி நசுக்கி ‘ஸ்கிராப்’ ஆக மாற்றப்பட உள்ளன,

இளைஞர்கள் சிலர் பிறரின் கவனத்தை கவர வேண்டும் என்பதற்காக, தங்கள் பைக் சைலென்சரில் மாற்றம் செய்கின்றனர். அதன் பின், காதை பிளக்கும் சப்தத்துடன் இயக்கப்படும் இது போன்ற வாகனங்களால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை இந்த வாகன உரிமையாளர்கள் மீது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து, அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. அபராதம் செலுத்திய பிறகும் பலர், மீண்டும் அதே விதிமீறலில் ஈடுபடுவதால், ‘பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்’ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கையை கடுமையாக்க மாநகர போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த பிரிவின் கீழ், பதிவு செய்யப்படும் வழக்கு, குற்றவியல் வழக்காக கருதப்படுவதால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிர்காலத்தில் அரசு வேலை, தனியார் நிறுவனங்களின் போலீஸ் சரிபார்ப்பு, பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சிக்கல் ஏற்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். விதிமுறைகளை மீறி ஆல்டர் சைலன்சர்களை பொருத்தி தரும், மெக்கானிக்குகள் மற்றும் உதிரிபாகக் கடைகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்து துணை கமிஷனர் மகேஸ்வரன் கூறுகையில், ”வாகனம் வாங்கியபோது எப்படி இருந்ததோ அப்படியே பயன்படுத்தவேண்டும்; தேவையற்ற மாற்றங்கள் செய்தால் நடவடிக்கை எடுப்போம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.