குளியலறைக்குள் பதுங்கிய சாரை பாம்பு – கணுவாயில் பரபரப்பு

Spread the love
கோவை மாவட்டம் கணுவாய் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில், வீட்டின் குளியலறைக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீள மஞ்சள் சாரை பாம்பு பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஈரப்பதமான இடங்களைத் தேடி பாம்பு, அரணை போன்ற ஊர்வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் விஷமற்ற சாரை பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது.

இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், சுமார் 5 அடி நீளமுள்ள அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.

பின்னர் பாம்பை பாதுகாப்பாக கையாளும் வகையில் முதலில் நீரில் நனைத்து, எடுத்துச் செல்லும் துணிப் பையையும் ஈரமாக்கி அதில் வைத்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர்.

கோடை காலத்தில் இத்தகைய உயிரினங்கள் குடியிருப்புகளுக்குள் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.