சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோயிலுக்கு பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான வேல்முருகன் இன்று வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் முருகன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தினார். தரிசனத்தின் போது பக்திப் பரவசத்தில் “சேவல் கொடி பறக்குது…” எனும் பாடலை தனது தனித்துவமான குரலில் பாடிய அவர், அங்கு இருந்த பக்தர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக கூறினார். “எந்த ஊருக்கு சென்றாலும் முருகன் கோயிலுக்கு சென்று மக்களோடு கலந்து தரிசனம் செய்வது எனக்கு மிகுந்த சந்தோஷம். கோவைக்கு வந்தால் மருதமலைக்கு வருவது வழக்கம்” என்றும் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தையும் பாராட்டிய அவர், “மக்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தனர். அவர்களின் ஆதரவால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து வளர வேண்டும் என்று முருகனிடம் வேண்டிக்கொண்டேன்” என்றார்.
அதோடு, தன்னுடைய வாழ்க்கையில் முருகன் அருளால் பல முன்னேற்றங்கள் கிடைத்துள்ளதாகவும், “முருகன் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். அவரை நம்புவோர் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்” எனவும் பக்தி உணர்வுடன் கூறினார்.



Leave a Reply