சனாதனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், பா.ஜ.க தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிஷோர் குமார், “சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை மறைப்பதற்காகவே சனாதனம் குறித்து பேசப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் மத உணர்வுகளை தூண்டும் முயற்சியில் தி.மு.க ஈடுபட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் எங்கு சென்றாலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன், கோட்ட செயலாளர் உருவை பாலன், ராஜ்குமார், பாலகிருஷ்ணன், அசோக் குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Leave a Reply