வாடிக்கையாளர் போல் வந்து செல்போன் பறிப்பு – வடவள்ளியில் அதிர்ச்சி சம்பவம்

Spread the love
கோவை வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் போல வந்த மர்ம நபர், கடைக்காரரின் கண்ணெதிரிலேயே விலை உயர்ந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது. புதிய மாடல் மொபைல் வாங்குவது போல நடித்து, அதன் சிறப்பம்சங்களை கடைக்காரரிடம் கேட்ட மர்ம நபருக்கு, கடைக்காரர் ஒரு விலை உயர்ந்த மொபைலை காட்டினார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர் திடீரென மின்னல் வேகத்தில் கடையை விட்டு வெளியே ஓடினார்.

கடைக்கு வெளியே அவரது கூட்டாளி ஒருவர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து காத்திருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் வாகனத்தில் ஏறி, இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சியடைந்த கடைக்காரர் அவர்களைத் துரத்திச் செல்ல முயன்றும், அவர்கள் விரைவாக மாயமாகி விட்டனர்.

இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த காட்சிகள் வெளியாகி வியாபாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.