மரங்களை அடிப்படையாக கொண்ட விவசாயம் தான் இந்தியாவின் வருங்காலத்தை நிலை நிறுத்தும் – ஐ.நா விருது பெற்ற இயற்கை விவசாயி வள்ளுவன் தகவல்

Spread the love

‘மரங்களை அடிப்படை யாக கொண்ட விவசாயம் தான் இந்தியாவின் வருங்காலத்தை நிலை நிறுத்தும்’, என, இயற்கை விவசாயி வள்ளுவன் பேசினார்.
கோவை கொடிசியா தொழிற் கண்காட்சி வளாகத்தில், இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், “உழவே தலை 2.0” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐ.நா விருது பெற்ற இயற்கை விவசாயி வள்ளுவன் பேசியதாவது:
தமிழ்நாட்டின் விவசாயம் 60-70 ஆண்டுகளில் தலைகீழாக மாறியுள்ளது. உலகில் 365 நாட்களும் விவசாயம் செய்ய வசதியான, தகுதியான நிலங்கள் இந்தியாவின் தென் மாநிலங்கள் தான். வளமான மண்ணை கொண்ட தமிழ்நாட்டின் கரிம வளம் 2-3 சதவீதம் இருந்தது. தற்போது இது, 0.5க்கும் கீழ் உள்ளது. தவறான வேளாண்மை முறை புகுத்தப்பட்டுள்ளதால், இந்த அங்கக கரிம வளம் குறைந்துள்ளது.


ஒரு கிலோ யூரியாவில் 50 கிலோ விளைந்த கோதுமை, இன்று 5 கிலோவாக குறைந்து விட்டது. மண்ணை மாற்ற, மண் வளத்தை அதிகரிக்க நாட்டு மாட்டு சாணம் பயன்படுத்த வேண்டும். மரங்களை அடிப்படையாக கொண்ட விவசாயம் மிகவும் அவசியமாகிறது. விவசாயம் அழிவை நோக்கி செல்ல ஒரு பயிர் கலாச்சாரம் தான் காரணியாக உள்ளது.
மரங்களை அடிப்படை யாக கொண்ட விவசாயம் தான் இந்தியாவின் வருங்காலத்தை நிலை நிறுத்தும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கக கரிம நுண்ணுயிர் கொண்டதாக மாற்றியதற்கான இந்திய அளவில் முதல் முதலாக பரிசு பெற்றுள்ளோம். அங்கக கரிமங்களின் அளவு 3.03 என்ற அளவிற்கு உயர்த்தி இருந்தாலும், 1.56 என்ற அளவில் 3ம் பரிசையே பெற முடிந்தது. பங்கேற்ற 164 நாடுகளில் முதல் பரிசை சீனா பெற்றது.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்திய தொழில் வர்த்தக சபை(ஐசிசிஐ) கோவை தலைவர் ராஜேஷ் லுந்த் பேசும் போது, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான விவசாய முறைகள் மூலம் வேளாண் துறை வேகமாக மாற்றமடைந்து வருகிறது. இந்த மாற்றங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும், புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும், விவ சாயிகள், புதுமையாளர்கள், தொழில் துறையினர் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.
அந்த நோக்கத்துடன், வனிதா மோகன் தலைமையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ‘உழவே தலை’ (Uzhave Thalai) தொடங்கப்பட்டது. தற்போது அது தனது எட்டாவது ஆண்டில் வெற்றி கரமாக பயணித்து வருகிறது.
புதுமையான வேளாண் தொழில்நுட்பங்கள், சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் புதிய யோசனைகளை பகிர்ந்து கொள்ளும் மதிப்புமிக்க வேளாண் தளமாக ‘உழவே தலை’ இன்று வளர்ச்சி பெற்றுள்ளது,” என்றார்.
கருத்தரங்கின் ஆலோசகர் மணி சுந்தர், இந்த ஆண்டு முதல் “உழவே தலை” குழுவின் கற்றல் முயற்சியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், வேளாண் கருத்தரங்குகளுடன் இணைந்து விவசாயப் பண்ணைகளுக்கான களப்பயணங்களும் நடத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
அக்ரி இன்டெக்ஸ் 2026-இன் ஒரு பகுதியாக நடைபெற்ற “உழவே தலை 8.0” கருத்தரங்கில், ஐசிசிஐ கௌரவ செயலாளரும், ‘உழவே தலை 8.0’ ஒருங்கிணைப்பாளர் பிரதீப், ஐசிசிஐ முன்னாள் தலைவர் வனிதா மோகன், வேளாண் குழு உறுப்பினர் சரவணன் சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.