கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
100 அடி முழுக் கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 97 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் பவானியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் பவானியாற்றில் நீரின் வேகம் மற்றும் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் பவானியாறு கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், மீன்பிடிக்கவும் ஆற்றுப்பகுதிகளுக்குச் சென்று செல்ஃபி உள்ளிட்ட புகைப்படங்கள் எடுக்கவும் வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பில்லூர் அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றுப் பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கனஅடி வரை நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், முன்னதாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்ட நீரின் அளவு இன்று காலை குறைக்கப்பட்டுள்ளது.



Leave a Reply