என் வெற்றிக்கு காரணம் இதுதான்! நடிகர் அஜித்குமார்

Spread the love

சென்னை: நடிகர் அஜித்குமார் தன்னுடைய வெற்றி மற்றும் விடாமுயற்சி குறித்து பேசிய பேட்டி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாடியும் தான் எவ்வளவு முயற்சிகள் எடுக்கிறேன் என்று அந்த பேட்டியில் அஜித் பேசி இருக்கிறார். அதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் “தல” என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்குமார் நடிப்பில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி அதற்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. தான் சினிமாவில் அடுத்தடுத்து முன்னேறி கொண்டிருந்தாலும் தன்னுடைய கனவான கார் ரேஸிலும் ஆர்வம் காட்டிக்கொண்டு இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஜனவரி முதல் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அஜித்குமார் துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் போட்டிகளில் அஜித் குமார் ரேசிங் என்று அணி மூலம் கலந்து கொண்டு வருகிறார்.

வெற்றிக்கு உழைப்பு

சில போட்டிகளில் வெற்றியும் பெற்று இருக்கிறார் அதேபோல சில விபத்துகளையும் சந்தித்து இருந்தார். ஆனாலும் அதை எல்லாம் தாண்டி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். ஆட்டோ கார் இந்தியாவிற்கு அஜித்குமார் கொடுத்த பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்குமாரிடம் கார் விபத்துக்குள்ளான பிறகு மீண்டும் நீங்கள் கார் ஓட்ட வரும்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு அதற்கு அஜித்குமார் “என்னுடைய விபத்துக்கள் எல்லாம் ரொம்ப பெரியது. அதிலிருந்து மீண்டும் நான் கார் ஓட்ட வருகிறேன் என்றால் நம்முடைய கமிட்மெண்ட் தான். அதையெல்லாம் நான் பெருசாக எப்போதும் சொல்ல மாட்டேன்.

பல காயங்கள்

நான் என்ன நிலைமையில் இருந்தாலும் கார் ரெடியாகிவிட்டால் நானும் ரெடி ஆகிவிடுவேன். என்னால் முடியவில்லை என்று நான் தள்ளிப்போட மாட்டேன். அது தான் நான் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது வைத்துள்ள கமிட்மெண்ட். அதுபோலத்தான் என்னுடைய படங்களுக்கும் ஸ்டண்ட் காட்சிகளின் போது எனக்கு காயங்கள் ஏற்பட்டாலும் டேக் ஓகே என்ற ஒரு வார்த்தை கேட்டதும் நான் திரும்பவும் நடிக்க போய் விடுவேன். அந்த பஞ்சுவாலிட்டி என்னை ஒருபோதும் சினிமாவில் இருந்து வெளியேற்ற அனுமதிக்காது.

இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் நான் சினிமாவிற்குள் வரும்போது என்னுடைய குடும்பத்தினர் யாரும் திரைத்துறையில் இருந்ததில்லை. நான் ஒரு புதுமுக நடிகர் அதற்காக வெளியில் இருந்து வரும் நடிகர் என்று சொல்ல மாட்டேன். எனக்கு வெளியில் இருந்து வரும் நடிகர் சினிமாவில் உள்ளிருக்கும் நடிகர், நெப்டோனிசம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதற்காக நான் நிறைய விஷயங்களை செய்திருக்கிறேன் அவ்வளவுதான்.

ஏற்ற இறக்கங்கள்

சினிமாவை போல தான் கார் ரேசிலும் நிறைய ஏற்ற இறக்கங்கள் வரும். பொதுவாகவே நான் தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு சாதனையாளராக இருக்க விரும்புகிறேன். எனக்கான நேரம் வரும்போது திரும்பி பார்த்தால் என் முயற்சியை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்வேன். அவ்வளவுதான் என்று அந்த பேட்டியில் அஜித்குமார் பேசியிருக்கிறார்.

அஜித்குமார் பேசிய இந்த பேட்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் இருக்கிறது. எந்த வேலையை நாம் மனதார செய்தாலும் அதற்கான பலம் கண்டிப்பாக கிடைக்கும் என்று அஜித் தன்னுடைய வெற்றியால் காட்டி இருக்கிறார்.