குடிநீர் கட்டண உயர்வு – கோவை மாநகராட்சியை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Spread the love

கோவை மாநகராட்சியில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற அவசர கூட்டத்தில் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கட்டணங்கள் அநியாயமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதை கண்டித்து புதன்கிழமை  காலை 11 மணியளவில் அக்கட்சியினர் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்ற அவசர கூட்டத்தில் 24 பக்கங்கள் கொண்ட 101,102,103 ஆகிய தீர்மானங்கள் எவ்வித விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.இந்த மூன்று தீர்மானங்களில் கோவை மாநகரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கட்டிடத்தின் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு பாதாள சாக்கடை திட்டத்திற்கான தொகை மற்றும் குடிநீர் கட்டணத்திற்கான வைப்புத் தொகை ஆகியவற்றைத் தீர்மானித்து உள்ளது.

இதன் விளைவாக இதுவரை ரூ.4.50-க்கு பொதுமக்கள் பெற்று வந்த குடிநீர் தற்போது ரூ.18 முதல் ரூ.150 வரை உயரக் கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஆயிரம் லிட்டருக்கு ரூ.2 மட்டுமே மாநகராட்சி செலுத்தும் நிலையில், பொதுமக்களிடம் மொத்தமாக கொள்ளை அடிக்கும் அநியாய கட்டண உயர்வை திரும்பி பெற வேண்டும்.

ஏற்கனவே ஆண்டுக்கு 6% குடிநீர் வரி உயர்வு அமலில் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக ஆண்டுக்கு 3% உயர்த்தப்பட்டு இருப்பது மக்களை பாதித்துள்ளதாக கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.