நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், ரவி மோகன் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற விரும்பி, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் இருவரும் சமீபத்தில் கோர்ட்டில் ஆஜராகினர். சமரசத்தின் வாயிலாக விவகாரத்தை முடிக்க வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு மாற்றிய நீதிமன்றம், அங்கு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. ஆனால் இருவரும் எட்டிய பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படாததால், வழக்கு மீண்டும் குடும்ப நல கோர்ட்டுக்கு திருப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில், விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி, தனித்தனியாக கார்களில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆர்த்தி தனது தந்தையுடன் வந்தார்.
விசாரணையின் போது, ஆர்த்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமும், இரு மகன்களும் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் பெற வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Leave a Reply