ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சி

Spread the love

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநரகம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து, விக்சித் பாரத் – இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதன் தொடக்கவிழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றார்.

பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் ரூபா குணசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 18 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் பங்கேற்று “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினர்.

இதற்காக 660 மாணவர்களிடம் இருந்து பதிவுகள் பெறப்பட்டு, அதிலிருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று அதிலிருந்து சிறப்பாகச் செயல் விளக்கம் அளித்த, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் சங்கமி, நேகா தாஸ், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் சல்மான் பாரிஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணா, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் அஜய் பிரசாந்த், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆர்த்தி சரண், குமரகுரு கலை அறிவியல் கல்லூரி மாணவர் முகமது அஸ்வத், அபிராம், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி பிரபிதா, சங்கரா கலை அறிவியல் கல்லூரி மாணவி ஜனனி ஆகிய 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் 3 மாணவர்கள் புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்விற்கு வழக்கறிஞர் வி.சிவக்குமார், நீலகிரி வழக்கறிஞர் பி.குமரன், முன்னாள் வனக் கால்நடை அலுவலர் டாக்டர் என்.எஸ்.மனோகரன், நேரு யுவகேந்திரா கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், நிறை அறக்கட்டளை திட்ட செயல் இயக்குநர் என்.ஆர்.பரமேஸ்வரி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.