பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது பாயிண்ட் நெமோ (Point Nemo) பகுதி. இது யாரும் நெருங்க முடியாத கடல் துருவமாகும். மக்கள் வசிக்கும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 2,688 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியை, இந்திய கடற்படையில் பணி புரியும் லெப்டினன்ட் கமாண்டர்கள் தில்னா மற்றும் ரூபா, இந்திய கடற்படை கப்பலான ஐ.எஸ்.எஸ்.வி. தாரிணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாயிண்ட் நெமோவைக் கடந்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளனர்.
கடற்படை கப்பலான தாரிணி, கோவாவில் இருந்து தனது உலகம் சுற்றும் பயணத்தை அக்டோபர் 2, 2024 அன்று தொடங்கியது. டிசம்பர் 22 -ல் நியூயார்க் நகரில் உள்ள லிட்டல்டன் துறைமுகத்தை அடைந்த தாரிணி, பயணத்தின் இரண்டாம் நிலையை நிறைவு செய்தது. இந்த மாத தொடக்கத்தில் லிட்டல்டனிலிருந்து மீண்டும் நீண்ட பயணத்திற்கு புறப்பட்ட தாரிணி, சுமார் 5,600 கடல் மைல்களை கடந்து, பால்க்லாந்து தீவுகளில் உள்ள ஸ்டான்லி துறைமுகத்தை அடைந்தது. வழியில், பாயிண்ட் நெமோவை கடந்த சாதனையையும் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவிற்கு இடையே அமைந்துள்ள பாயிண்ட் நெமோ, பூமியில் மிகவும் தனிமை சூழ்ந்த இடமாகும். மக்கள் வசிக்கும் நிலப்பரப்பிலிருந்து இப்பகுதி மிக தொலைவில் இருப்பதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களே இந்த பகுதிக்கு நெருக்கமாக உள்ளனர்.
அணுக இயலாத பெருங்கடல் துருவம் என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் பாயிண்ட் நெமோவை, 1992 ஆம் ஆண்டில் கனடிய-ரஷ்ய பொறியாளரான ஹ்ரவோஜே லுகட்டலே கண்டுபிடித்தார். ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஸ்கைலேப் உட்பட 260-க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைகள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுவதைத் தடுத்து, இந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
Leave a Reply