, , , ,

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

kongunadu arts and science college
Spread the love

இந்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒருங்கிணைப்புடன் கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவா் மா. ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய “நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும்” என்னும் பொருண்மையிலான இரண்டாவது கருத்தரங்கத்தின் தொடக்கவிழா கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியிலுள்ள முனைவா் மாரப்ப கவுண்டா் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் வே. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழக நிலையாற்றல் பொருட்கள் துறையின் பேராசிரியா் முனைவா் செந்திலரசு சுந்தரம் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மையா் (வேளாண்மைப் பொறியியல்) முனைவா் ஏ. ரவிராஜ் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் கோயம்புத்தூா் பிரிவின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் எஸ். பால்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழக நிலைப் பொருளியல் மையப் பேராசிரியரும் இணைமுதன்மையருமான முனைவா் டேவிட் ஹியூஸ் கருத்தரங்க நோக்கவுரையாற்றினார். அவரது உரையில், “ஜவுளித் தொழில் சுழற்சியின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் நெகிழி மறுசுழற்சியில் மேற்கொள்ள வேண்டிய நுட்பங்கள் பற்றியும் கூறினார்.
ஜவுளி மற்றும் வேதியியல் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதிலிருந்து நீராதாரங்களை எவ்வாறு மீட்பது, மறுசுழற்சி செய்வது என்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.”
இவ்விழாவில் நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் என்னும் மையப் பொண்மையின் அடிப்படையில் பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், நீா்வளப் பாதுகாப்பு ஆா்வலா்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம் அடங்கிய நூலைக் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி அவா்கள் வெளியிட இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகப் பேராசிரியா் முனைவா் டேவிட் ஹியூஸ் பெற்றுக்கொண்டார். தொடக்கவிழாவின் நிறைவில் இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்புச் செயலா் முனைவா் கு. முத்துக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 07.01.2025 அன்று நடைபெறவுள்ள கருத்தரங்க அமர்வுகளில் இங்கிலாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞா்களும் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயராய்வு நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் பணியாற்றும் பேராசிரியா்களும் ஆய்வுரைகள் நிகழ்த்த உள்ளனா்.