திருமண செயலியில் பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் ஒருவர் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் வளர வளர அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக திருமண செயலிகளில் மோசடிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதற்கு, உதாரணமாக கோவையில் ஒரு சம்பம் நடந்துள்ளது.
கோவை பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயம் செய்து வருகிறார். குடும்பம் நடத்தும் அளவுக்கு தேவையான வருமானம், சொத்து, நகை என எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் இவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பெண் எங்கும் கிடைக்கவில்லை.
எனவே, மெட்ரிமோனி திருமண செயலியில் பெண் தேடியுள்ளார் . அங்குதான் பிரியா என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இவர் எதிர்பார்த்த குணாதிசயங்களோடு பிரியா இருந்ததால் அவரை திருமணம் செய்துக்கொள்ள இளைஞர் விரும்பியுள்ளார்.
பிரியாவை காதலிக்கவும் செய்துள்ளார். சில நாட்கள் பழகிய பின்னர் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி இளைஞர் கேட்டுள்ளார். பிரியாவோ, தனக்கு என ஒரு கடமை இருப்பதாக கதை சொல்லியிருக்கிறார். அதாவது தன்னுடைய சகோதரி உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகவே இருப்பதாகவும், அவருக்கான மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி இளைஞரின் மனதை கரைத்துள்ளார்.
திருமண கனவில் இருந்து விவசாய இளைஞர், தன்னால் முடிந்த உதவியை செய்வதாக கூறியுள்ளார். இப்படியாக ரூ.7 லட்சம் வரை கொடுத்துள்ளார்.ஆனால் சில நாட்களுக்கு முன்னர் இளைஞரிடம் பேசுவதை பிரியா முற்றிலும் தவிர்த்துள்ளார்.
இதனால் சந்தேமடைந்த பிரியா கொடுத்த நாமக்கல் முகவரியில் சென்று பார்த்தபோது , அங்கு அப்படி ஒரு பெண்ணே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அந்த இளைஞர் அதிர்ச்சிக்குள்ளானார்.தொடர்ந்து, போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கிய காவல்துறை பிரியாவை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆனவர் என்பதும் தற்போது சேலத்தில் தனியாக வசித்து வருவதும் தெரிய வந்தது. கோவை இளைஞரை போலவே பலரை இவர் ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் மோசடி திருமண செயலியில் சிக்கிய பொள்ளாச்சி விவசாயி!

Leave a Reply