கோவை மாநகராட்சி நிர்வாகம் காந்திபுரம் பேருந்து நிலையத்தை ரூ.30 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் தொடங்கி நீலாம்பூர் வரை உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.200 கோடி மதிப்பில் கோவை சாலைகளை பழுது பார்க்கும் பணிகளும் நடக்கிறது.
கோவையில் ஹை டெக் சிட்டி அமைப்பதற்கான இடமும் ஆய்வு செய்யப்படுகிறது. செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. காந்திபுரம் பகுதியில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதேபோல காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.காந்திபுரம் பேருந்து நிலையல் 30 கோடியிலும் உக்கடம் பேருந்து நிலையம் 21 .55 கோடியிலும் மேம்படுத்தப்படவுள்ளது.
காந்திபுரம் பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்கள் உள்ளன. உள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பேருந்து நிலையங்களில் வசதிகள் குறைவாக உள்ளது. எனவே,தனித்தனி பஸ் பே, சார்ஜிங் ஸ்டேசன்கள், காத்திருப்போர் பகுதி, அண்டர் கிரெளண்ட் பார்க்கிங், வணிக வளாகங்கள் புதியதாக அமைக்கப்படவுள்ளன. பார்க்கிங் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளாகின்றன. தினசரி லட்சக்கணக்கான மக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு கழிவறை கூட முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பேருந்து நிலையம் சுகாதாரமாக இல்லை. இரு பேருந்துகளையும் நவீனப்படுத்தும் பணிகளுக்காக காந்திபுரம் மற்றும் உக்கடம் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்களிலும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ஐஐடி குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
ஹைடெக்காக மாறும் காந்திபுரம், உக்கடம் பஸ்நிலையங்கள் … ஐஐடி குழுவினருடன் கமிஷனர் ஆய்வு!

Leave a Reply