கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய, “வாகை சூட வா” என்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி,கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் பெறுநிறுவனத் தொடர்பு மைய இயக்குநர் முனைவர் எம்.தாமரைசெல்வன் வரவேற்றுப் பேசினார்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
“சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலம் மிகச் சரியானது. சரியாகத் திட்டமிட்டு, அதை நோக்கி நகரக்கூடிய தருணம் இது. எதிர்காலத்திற்கான முன்னோட்டத்தை இப்போதே தொடங்கி விட வேண்டும். நீங்கள் யாராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதை நோக்கிய திட்டமிடலுக்கு உங்கள் மனம் தயாராகிவிடும். பொதுவான நடைமுறைகள் என்னவென்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் பொறுத்தவரை, தொடர் கற்றல் மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தரும். முதல்முறை அல்லது பலமுறை முயற்சி செய்து வெற்றி பெற்றவர்கள் உள்ளனர். தேர்ச்சி பெற போதிய மதிப்பெண் பெறுவது, காலதாமத்தைக் குறைப்பதற்கு முறையான வழிகாட்டுதல்கள் அவசியம். மற்றவர்கள் அளிக்கும் ஊக்கத்தை விட, சுய ஊக்கமே சக்தி வாய்ந்தது. நிலையான தொடர் முயற்சி மிகவும் அவசியம். வழிகாட்டுதல்களுடன் கூடிய தொடர் முயற்சியே வெற்றியை பெற்றுத்தரும்” என்றார்.
அதைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு, பதிலளித்தார். பின்னர் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குநர் எம்.பூமிநாதன், சிவில் சர்வீஸ் தேர்வு முறைகள் குறித்துப் பேசினார். இதில் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் பெறுநிறுவனத் தொடர்பு மையத் தலைவர் முனைவர் ஆர்.ரேகா நன்றி கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Leave a Reply