பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்துள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
கொங்கு மண்டலம் என்றால் தமிழ்நாட்டிற்கு தொழில் வளங்களை கொடுக்கும் மண்டலம். ஆனால் கடந்த சில ஆண்டு காலமாக இந்த பகுதியில் கிட்டத்தட்ட 50,000 க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் மின் கட்டண உயர்வு. அதிலும் குறிப்பாக கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பல நிறுவனங்கள் மூடிய பிறகும், தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை கிட்டத்தட்ட 34 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. 2022 செப்டம்பர் மாதம் 26 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது, 2023 ஜூலை மாதம் 2.1 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. 2024 ஜூலை மாதம் 4.8 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இதனால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழே முக்கால் கோடி மக்களுக்கும் பாதிப்பு. முதலமைச்சர் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், குறைக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முடியாத ஒரு சூழல் உருவாகிவிடும்.
மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் மாதம் மின் கணக்கெடுப்பு நடத்துவோம் என்று சொன்னார்கள். அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் மாதம் மாதம் மின் கணக்கெடுப்பு எடுக்கிறார்கள். ஏன் உங்களால் எடுக்க முடியவில்லை? இப்படி எடுத்தார்கள் என்றால் கிட்டத்தட்ட 17 முதல் 18 விழுக்காடு மின் கட்டணம் குறையும். குறிப்பாக ஏழை மக்கள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்.
இப்போது காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி விடும். இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அத்தனை நீரும் கடலுக்கு தான் செல்ல உள்ளது. கடந்த 57 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளுக்கு இந்த நீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. எவ்வளவோ திட்டங்கள் நிலுவையில் உள்ளது, அதற்கெல்லாம் முக்கியத்துவம் கிடையாது. குறிப்பாக தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டம் மேட்டூர் சேலம் உபரி நீர் திட்டம் அத்திக்கடவு அவிநாசி திட்டம் நல்லாறு பாம்பாறு திட்டம், அதன்பிறகு காவிரி குண்டாறு திட்டம், காவிரி குண்டாறு திட்டம் என்பது கிட்டத்தட்ட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு நீர் செல்கின்ற திட்டம். கரூர் சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை மதுரை விருதுநகர் வரை செல்கிறது. இதற்கு 16,000 கோடி ரூபாய் அறிவித்தார்கள் ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. இது போன்ற திட்டங்கள் அப்படியே இருக்கிறது.
இப்போது குறுவை சாகுபடி சரியான முறையில் நடக்கவில்லை, காரணம் தண்ணீர் இல்லை. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த ஆண்டு திறக்கவில்லை இப்போது தண்ணீர் நமக்கு வந்துள்ளது. சம்பா நடவுக்காவது தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் கால்வாய்கள் இன்னும் தூர்வாரப்படவில்லை. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடைகோடி பகுதிக்கு நீர் செல்லவில்லை.
கோவை பகுதியில் கனிமவள கொள்ளை மிகப் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி எத்தனையோ போராட்டம் நடத்தி உள்ளது. தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பால் தான் இந்த கனிம வள கொள்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்று நம்முடைய கனிம வளத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது செங்கல் சூளையாக இருந்தாலும் சரி, வேறு எதற்காக இருந்தாலும் சரி கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கிடைக்கக்கூடிய வருமானம் அனைவருக்கும் செல்கிறது, தமிழக அரசு மெத்தனமாக உள்ளது.
சரியான முறையில் நிர்வாகம் இல்லை என்பது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம். மின்சாரத் துறையில் ஊழல் எப்படி நடக்கிறது என்றால், கோடை காலத்தில் தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவை 20 ஆயிரம் மெகாவாட், இந்த 20 ஆயிரம் மெகாவாட்டில் 5000 மெகாவாட் தமிழக அரசு தயாரிக்கிறது. மீது இருக்கும் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 4000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுக் கொள்கிறது. 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து பெறுகிறது.
தமிழக அரசு தயாரிக்க கூடிய மின்சாரத்தின் விலை ஒரு யூனிட் 3.40 ரூபாய் என்றால், தமிழக அரசு தனியாரிடமிருந்து வாங்கக்கூடிய ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 11 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரையில் இருக்கிறது. தமிழக அரசு மின் திட்டங்களை தொடங்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் தயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இது தான் நடந்து கொண்டிருக்கிறது. மின் உற்பத்தி திட்டங்கள் அறிவிப்பு மட்டும் தான் வருகிறது. தனியாரிடமிருந்து கமிஷன் அதிகமாக வரும் என்பதால் அதனை வேண்டும் என்று நிறுத்தி வைத்துள்ளார்கள், தொடங்க மறுக்கிறார்கள்.
கோவை மாநகரத்தில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்துள்ளது. சின்ன மழை பெய்தால் கூட போதும் இந்த சாலைகள் முடிந்துவிடும், கோவை மேயர் ராஜினாமா செய்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் கோவையில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 77 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது, இதில் 27 லட்சம் டீ க்கு மட்டும் செலவு செய்துள்ளார்கள். டீ சீனாவில் இருந்து வந்ததா? என்பது குறித்து விசாரணை செய்து யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உறுதியாக எடுக்க வேண்டும்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை எப்போது கொண்டு வருவீர்கள்? அதில் என்ன தான் உங்களுக்கு பிரச்சனை? ஏற்கனவே இந்த திட்டத்தை அரைகுறையாக தான் கொடுத்துள்ளார்கள். 3400 கோடி ரூபாய் திட்டத்தை வெறும் 1500 கோடி ரூபாய்க்கு கொண்டு வந்துள்ளார்கள். தற்போது தென்மேற்கு பருவமழை நமக்கு வந்து கொண்டிருக்கிறது வருகின்ற தண்ணீரை நாம் கடலுக்கு அனுப்பிவிட்டு, பிறகு தண்ணீர் இல்லை என்ற ஒரு சூழ்நிலையில் தள்ளி விடுவது நிர்வாக திறமை இல்லாத இது தான் காரணம்.
பாமகவின் பல ஆண்டு கால கோரிக்கையான நல்லாறு – பாம்பாறு திட்டம், பாண்டியாறு – புன்னம்புழா திட்டம், இந்த இரண்டு திட்டங்களையும் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்தில் நாம் செய்ய வேண்டிய திட்டங்கள் இதுதான். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்காக எங்கேயாவது நிதியை வாங்கி, இதில் முதலீடு செய்ய வேண்டும், நம் வருங்கால சந்ததிகளுக்கான திட்டம்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைத்திருக்கிறது. முதலமைச்சரிடம் இது குறித்து எவ்வளவு முறை புகார் கொடுத்தாலும் ஏதோ ஒரு கூட்டத்தை நடத்துகிறார். அதன் பிறகு கஞ்சா விற்பவர்கள் யாரையும் பிடித்ததாக தெரியவில்லை, ஆனால் கஞ்சா 1.0 2.0 3.0 4.0 என அப்போ அப்போ ரெய்டு மட்டும் நடக்கிறது. அதில் ஒரு 5000 பேர் பிடிக்கிறார்கள், பிடித்து 15 நாட்களில் அவர்கள் வெளியே வந்து விடுகிறார்கள்.
மதுவை கொடுத்து தமிழகத்தின் மூன்று தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள். அடுத்து கஞ்சாவை கொடுத்து இந்த தலைமுறையை நாசப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். காவல் துறைக்கு தெரியாமல் யாரும் கஞ்சா விற்க முடியாது. காவல்துறைக்கு தெரியாமல் ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய முடியாது. கள்ளச்சாராயம் தடை செய்வதற்காக சட்டத்தை புதுப்பித்துள்ளார்கள். அந்த சட்டத்தில் யாராவது கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை 10 லட்சம் அபராதம் என சொல்லி இருக்கிறார்கள். இப்போது சந்து கடைகளில் டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனை செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்? அதுவும் கள்ளச்சந்தை தானே? அதுவும் கள்ளச்சாராயம் தான். அவர்களையும் பிடித்து இதே சட்டத்தில் உள்ளே போட வேண்டும். அவர்களுக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். யார் இதனை விற்பனை செய்கிறார்கள்? திமுக காரர்கள் தான் விற்பனை செய்கிறார்கள், டாஸ்மாக் பார் நடத்துகிறார்கள், இந்த சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து ஆகின்ற சூழல் வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையில் எடுத்தால், அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, நீங்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினீர்களா என்று தான் கேட்பார்கள். எந்த அதிகாரத்தில் இந்த சட்டம் இருக்கிறது அதாவது இதே கேள்வியை தான் கடந்து 2010 இல் கேட்டார்கள், ஒன்பதாவது அட்டவணையில் நமக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னால் அதற்கு மறுப்பு கிடையாது.
இது குறித்து முதலமைச்சர் அதிகாரிகள் அமைச்சர்கள் அனைவரிடமும் தெரிவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அவர்கள் பொய் பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். எல்லா அதிகாரமும் உள்ளது பீகார் மாநிலத்தில் Indian statistics act 2008 படிதான் அங்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு பீகார் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை. அதை அனுமதித்துள்ளார்கள். இதே போல் ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து விட்டார்கள், ஒடிசா ஜார்கண்ட் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கும் போது, தமிழகத்தில் உள்ள முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டப்படி பஞ்சாயத்து தலைவருக்கு கூட அதிகாரம் உள்ளது. முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்காதா? உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். ஆனால் இவர்கள் ஏதோ ஒரு முக்கிய காரணத்துக்காக இந்த கணக்கெடுப்பை நடத்த தயங்குகிறார்கள் என்ன அரசியல் காரணம் என்று அவர்கள் தான் விளக்கம் கூற வேண்டும்.
முதலமைச்சர் சொல்கிறார் மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறார். மத்திய அரசு எடுத்தால் அது மக்கள் தொகை கணக்கெடுப்பு. ஒவ்வொரு பத்தாண்டுக்கும் எடுக்க வேண்டும், 2021 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக அது எடுக்கப்படவில்லை. தற்போது 2026 ஆம் ஆண்டு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்த உள்ளது.
அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாலும், தலைகளை மட்டும் தான் எண்ணுவார்கள். அந்த சமுதாயங்களின் நிலை என்ன? அந்த மக்கள் எந்த அளவுக்கு பின்தங்கி உள்ளார்கள்? இதெல்லாம் அவர்கள் எடுக்க முடியாது. உண்மையிலேயே உங்களுக்கு சமூக நீதி மீது அக்கறை இருந்தால், எந்தெந்த சமுதாயம் எந்தெந்த நிலையிலே இருக்கிறது? பொருளாதார ரீதியாக எந்த நிலையில் இருக்கிறது? என்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
உதாரணமாக இப்போது மலைக் குறவர்கள் சமுதாயம் இருக்கிறது என்றால், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் படித்து உள்ளார்கள்? அவர்களுக்கு வீடு உள்ளதா? குடிசையில் இருக்கிறார்களா? கழிப்பறை இருக்கிறதா? பட்டதாரிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அரசு பதவிகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அதை எல்லாம் எடுத்து அவர்களுக்கு ஏற்ப திட்டங்களை வகுத்து கொடுக்க வேண்டும். திட்டங்களை, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி. அதை விட்டுட்டு நான் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மாட்டேன், எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதெல்லாம் கோழைத்தனமாக நான் பார்க்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆபத்து வந்திருக்கிறது. ஒரு காலகட்டத்தில் இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால் அன்றே திமுக அரசு கவிழும், அன்றே வீட்டுக்கு செல்ல வேண்டியது தான். உங்கள் கட்சியே போய்விடும், இதையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு திரும்ப திரும்ப நாங்கள் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம்.
மத்திய அரசு 48 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு உள்ளது, இந்த பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எதுவும் வராதா என்ன? இதுவரைக்கும் தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் சொல்லி இருக்கிறார்களா? காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்யும் போது இவ்வளவு காலம் பட்ஜெட் போட்டு உள்ளது, அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் அவர்கள் சொல்லி இருக்கிறார்களா?
இந்த பட்ஜெட்டை பொருத்தவரைக்கும், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் மூலம் தமிழகத்திற்கு கூடுதலான திட்டங்களும் கூடுதல் நிதி ஒதுக்கிடும் கொடுத்துள்ளார்கள். இன்னும் சிறிது காலத்தில் அது என்னென்ன என்பது நமக்கு தெரிந்துவிடும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ரயில்வே துறையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 6500 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 200 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதே போல் ஒவ்வொரு துறையிலும் தமிழகத்திற்கு கூடுதலாக தான் நிதியை கொடுத்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டில் பெயர் சொல்லவில்லை, புறக்கணிக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் சரியான அரசியல் இல்லை.
கடந்த முறை மழை வெள்ளத்தின் போது கூட தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன். அது ஒரு புறம் இருக்கட்டும், நான் இப்போது தமிழக அரசைப் பார்த்து கேட்கிறேன், நீங்கள் ஆண்டு தோறும் மூன்றரை லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறீர்கள், ஆயிரம் கோடி ரூபாய் மழை வெள்ளத்திற்காக ஒதுக்கீடு செய்ய முடியாதா? அப்போ உங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லையா? மழை வரும் என்று தெரியாதா? வெள்ளம் வரும் என்று தெரியாதா? வறட்சி வரும் என்று தெரியாதா? அப்போ உங்கள் பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதா? மத்திய அரசு நிதி கொடுத்து தான் ஆக வேண்டும், அதை நான் இல்லை என்று சொல்லவில்லை, மாநில அரசுக்கு உங்களுக்கென்று ஒரு கடமை இல்லையா? என்பது தான் என் கேள்வி. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, இதனை தவிர்க்க முடியாது, இது திட்டமிடுதல். அடுத்த ஆண்டு வெள்ளம் வரும், அடுத்த ஆண்டு வறட்சி வரும், விவசாயிகளுக்கு செய்ய வேண்டும் என்று உங்களுடைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குங்கள்.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்களும் இந்த பட்ஜெட்டில் வரவில்லை. பெயர் வராதது ஒரு பிரச்சனையா? நிதி வருகிறதா? திட்டங்கள் வருகிறதா? அப்பறம் என்ன பெயர் வரவில்லை என்ற ஒரு அரசியல் செய்கிறீர்கள்? தமிழகத்தின் உரிமைகளை நாங்கள் எள்ளளவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. கோயம்புத்தூர் மெட்ரோ திட்டமாக இருந்தாலும் சரி சென்னை மெட்ரோ திட்டமாக இருந்தாலும் சரி, திட்டத்திற்கான நிதியை நாங்கள் சண்டை போட்டு வாங்குவோம்.
ஆரம்பம் முதலே நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பது தான் எங்களுடைய கொள்கை. ஒவ்வொரு மாநிலத்திற்கு உண்டான கொள்கையை மத்திய அரசு விட்டுக் கொடுத்து விட வேண்டும். நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, சமூக நீதிக்கு ஏழை மாணவர்களுக்கு எதிரானது, இது மட்டுமல்லாமல் அண்மையில் ஒரு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, நீட் தேர்வு இரண்டு கட்ட தேர்வுகளாக நடக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அப்படி நடந்தால் இன்னும் கூடுதலான பயிற்சி தேவைப்படும், இந்த நீட் தேர்வினால் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நீட் பயிற்சி மையங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீட் தேர்வுக்கு முன்னால் ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர்கள் ஐந்து லட்சம் ஆறு லட்சம் பணம் கட்ட வேண்டிய நிலை இருந்தது. தற்போது 30 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்வு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே வந்துள்ளது, ஏழை மாணவர்களுக்கு இல்லை. நீட் பயிற்சி மையங்களுக்காக மட்டுமே இந்த நீட் தேர்வு வந்துள்ளது. நீட் தேர்வு மாநில அரசின் பாடத்திட்டத்தில் வராது, இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும், குறிப்பாக தனியார் பள்ளியில் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய கல்வி முறையே தவறான கல்வி முறை என்பது போல கட்டமைக்கிறார்கள். குறிப்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழகத்தின் வரலாறு எல்லாம் இடம்பெறாது எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.
தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பாக பாராட்டு விழா நடக்க உள்ளது. இந்த விழாவை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 19 தனியார் பள்ளிகள் மட்டும் தான் இருந்தது, இன்று மூன்றில் இரண்டு பங்கு தனியார் பள்ளிகள் தான் உள்ளது. அரசு பள்ளிகள் மூடு விழா நடந்து கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசின் தோல்வி. கல்வி கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இலவசமாக தரமான கல்வியை கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளை தமிழகம் முழுவதும் தொடங்க வைத்து, இன்று தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது என்பது உங்களை நீங்களே திட்டிக் கொள்வதற்கு சமமானது. நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் தமிழக அரசின் கல்வித்துறை தோற்றுவிட்டது அதனால் தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் பாராட்டு விழா நடத்துகிறோம் என்று உங்களின் தோல்விக்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என அன்புமணி பேசினார்.
Leave a Reply