கேசம் பராமரிப்புக்கு உதவும் வேப்பம் எண்ணெய்… வீட்டிலேயே தயாரிக்கலாம்

Spread the love

முடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயம், கறிவேப்பிலை, வேப்ப இலைகள் கொண்ட எண்ணெய்யை நாம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்.
வாழ்க்கை முறை மாற்றம், மோசமான உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவை காரணமாக தற்போது இளைஞர்களிடையே முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்துவிட்டது. குறிப்பாக முடி உதிர்தல், வறட்சி மற்றும் இளநரை போன்றவை இப்போதெல்லாம் பொதுவான பிரச்சனைகளாகிவிட்டன. வீட்டிலேயே முடி வளர்ச்சிக்கு ஒரு பிரத்யேக எண்ணெயை எளிதாகத் தயாரிக்கலாம். உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே முடிக்கான எண்ணெய்யை தயாரிக்க முடியும். அதில் வேப்ப இலைகள், கறிவேப்பிலை, வெந்தய விதைகள், கருஞ்சீரகம், தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காயம் சேர்க்கப்படும். இந்தப் பொருட்கள் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும்.
வேப்ப இலைகள் உச்சந்தலையைச் சுத்தம் செய்யவும், பொடுகைக் குறைக்கவும் உதவுகின்றன. கறிவேப்பிலை முடிக்கு ஊட்டமளித்து, இளநரையைக் குறைக்கிறது. வெந்தயம் முடியை வலுப்படுத்த உதவுகிறது. அதே சமயம் கருஞ்சீரகம் முடி வளர்ச்சிக்கு நன்மை அளிக்கிறது. மேலும், வெங்காயத்தில் உள்ள பண்புகள் முடி வேர்களை வலுப்படுத்த உதவுகின்றன. தேங்காய் எண்ணெய் முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். அதில் வேப்ப இலைகள், கறிவேப்பிலை, சிறிதளவு வெந்தயம், கருஞ்சீரகம் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். இந்தப் பொருட்கள் லேசாக நிறம் மாறத் தொடங்கும் வரை, இவற்றை குறைந்த தீயில் சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பிறகு, அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஆற விட வேண்டும். எண்ணெய் முழுமையாக ஆறியவுடன், அதை வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும். இப்போது முடி வளர்ச்சிக்கான எண்ணெய் தயார்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் முடியின் வேர்களில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். சில மணிநேரங்களுக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் உங்கள் தலைமுடியை ரசாயனம் குறைந்த ஷாம்பு அல்லது சீயக்காய் தடவி அலசவும். எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவது உங்கள் தலைமுடியில் பளபளப்பையும் வலிமையையும் அதிகரிக்கும்.