மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரவிருக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 48 மனுக்களில் 28 மனுக்கள் ஏற்கப்பட்டு, ஒரு சுயேச்சை வேட்பாளர் தனது மனுவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க.வின் பரந்தாமன், அ.தி.மு.க.வின் கணிதா சம்பத் உட்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

அதேபோல், தாராபுரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 51 மனுக்களில் பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதலுக்குப் பிறகு த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அடங்கிய 22 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் உறுதியாகி உள்ளதால், இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.