பொருளாதாரத்தில் பின் தங்கிய மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவும் நோக்கில், ஹேப்பி ஃபீட் ஓட்டப்பந்தயக் குழு சார்பில் கோவையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.
கோவை கொடிசியா அருகே நடைபெற்ற இந்த மராத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதில் இளைஞர்கள், இளம்பெண்கள், காவல்துறையினர், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஹேப்பி ஃபீட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இந்த மராத்தான் நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் திரட்டப்படும் நிதி பொருளாதார வசதி இல்லாத மாற்றுத்திறனாளி வீரர்கள் பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக நடைபெற்ற மராத்தான் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதில் 5 வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், 4 வீரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமையை ஊக்குவித்து, சர்வதேச அளவில் சாதிக்க தேவையான ஆதரவை வழங்கும் நோக்கில் இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.



Leave a Reply