கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் மருந்தில்லா இரத்தக் கட்டி நீக்கும் சிகிச்சை வெற்றி

Spread the love
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை, ‘ரோட்டாரெக்ஸ் ஆதரோத்ரோம்பெக்டமி’ என்ற அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மருந்து செலுத்தாமல் இரத்தக் கட்டியை அகற்றும் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் மருத்துவமனையாக கேஎம்சிஹெச் திகழ்கிறது.

வலது காலில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, காலை இழக்கும் அபாயத்தில் இருந்த நடுத்தர வயதுடைய நோயாளிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘துரோம்போலிசிஸ்’ முறையில் பயன்படுத்தப்படும் இரத்தக் கட்டியைக் கரைக்கும் மருந்துகளுக்கு பதிலாக, ‘ரோட்டாரெக்ஸ்’ கருவி இரத்தக் கட்டியை உடைத்து உறிஞ்சி அகற்றுவதால், இரத்தக்கசிவு அபாயம் கணிசமாகக் குறைகிறது.

இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறையைச் சேர்ந்த டாக்டர்கள் மேத்யூ செரியன், பங்கஜ் மேத்தா மற்றும் சந்தோஷ் ஆகியோர் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். சிகிச்சைக்குப் பிறகு இரத்த ஓட்டம் சீராகி, அடுத்த நாளே நோயாளி நடக்கத் தொடங்கினார்.

கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, உலகத் தரத்திலான இரத்தக் குழாய் சிகிச்சைகளை கோவையிலேயே வழங்குவது மருத்துவமனையின் நோக்கம் என்றார். மேலும், கடினமான இரத்தக் குழாய் அடைப்புகளை அகற்றும் ‘ஜெட்ஸ்ட்ரீம் ஆதரெக்டமி’ தொழில்நுட்பத்தையும் மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் முதன்முறையாக கேஎம்சிஹெச் அறிமுகப்படுத்தியுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.