மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கே உள்ளது – கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் பேட்டி

Spread the love

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் த.வெ.க தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார். முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்துள்ளார்.

தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருவது, தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றும் கூறினார்.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய சிறந்த வேட்பாளர்கள் த.வெ.க கட்சியில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

த.வெ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.

துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, விஜய் முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றார்.

தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக திரண்டு வருவது இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.