கோவை அருகே மத்தம்பாளையம் பகுதியில் கணவன், மனைவி மற்றும் 10 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கதிர் நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்த கமலேஷ், அவரது மனைவி இலக்கியா மற்றும் மகள் எக்சிதா ஏஞ்சல் ஆகியோர் தம்பு நகர் பகுதியில் வசித்து வந்தனர். இலக்கியா கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நோயின் தாக்கம் அதிகரித்து உடல் நிலை மோசமானதால் குடும்பம் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
சிகிச்சை பலனளிக்காததால் விரக்தியடைந்த கமலேஷ், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்து, பணியாற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பிய பின்னர், உணவில் விஷம் கலந்து மூவரும் உண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை நீண்ட நேரமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply