ஜிஎஸ்டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பி.எஸ்.ஜி கன்வென்ஷன் சென்டர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரம ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலம் முழுவதிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர். மத்திய நிதியமைச்சருக்கு வரிக்குறைப்பு நடவடிக்கைக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், வணிகர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
நிகழ்வில் பேசிய வணிகர் சங்க பிரதிநிதிகள், ஜிஎஸ்டி வரி விதிப்பினை இரண்டு பிரிவுகளாக குறைத்ததற்கு நன்றி தெரிவித்தனர். பண்டிகை காலங்களில் வரிக்குறைப்பு நடவடிக்கை வணிகத்தில் உயிர் ஊட்டியதாகவும், இதனால் வணிக வருவாய் அதிகரித்து பொருளாதாரம் சீரடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், ஜிஎஸ்டி இரண்டு வித வரி விதிப்பினை ஒன்றாக மாற்ற வேண்டும், சிறு வணிகர்களுக்கும் பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும், வரி அபராதம் விதிப்பு மற்றும் பதிவு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் உள்ளிட்ட 33 அம்சங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை மத்திய நிதியமைச்சரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கான பாராட்டுகள் அனைத்தும் பிரதமருக்கே சேரும்” என தெரிவித்தார். மேலும், கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நாடு முழுவதும் மக்கள் ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் வாங்கியதாகவும், இதனால் வணிகர்களுக்கு நேரடி பயன் கிடைத்ததாகவும் கூறினார்.
வரிக்குறைப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்ததோடு, வணிகர்களின் வருவாயும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக தொழில்கள் வளர்ச்சியடைந்ததோடு, வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் மேலும் கூறியதாவது, “வரிக்குறைப்பு நடவடிக்கையால் குறிப்பாக ஆட்டோமொபைல் துறை, இன்சூரன்ஸ் துறை, டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனை துறை ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளன. ஜிஎஸ்டி பதிவு நடைமுறைகள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறைகளை மேலும் எளிமைப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார்.
முன்னதாக, அவர் கோவை முதலிபாளையத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் அணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.



Leave a Reply