கோவை தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது – கைதானோர் எண்ணிக்கை 8

Spread the love

கோவை அருகே ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை வழக்கில், போலீசார் மேலும் இரு பேரை கைது செய்துள்ளனர்.

ஜூன் 14 அன்று கேரள திருச்சூரைச் சேர்ந்த நகை வியாபாரி ஜெயிசன் ஜேக்கப், தனது கடை ஊழியர் விஷ்ணுவுடன் கோவையில் தங்கம் வாங்கி காரில் திருச்சூர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது எட்டிமடை அருகே வந்தபோது, லாரியில் வந்த கும்பல் காரை வழிமறித்து, இருவரையும் தாக்கி, ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறித்து தப்பி சென்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக க.க. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த அன்சத், விஷ்ணு, அஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜூலை 6 அன்று ஆலாந்துறை சேர்ந்த சனீஸ், எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோகுல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கருண் சிவதாஸும் கடந்த ஆகஸ்ட் 4 அன்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், வாளையார் சோதனைச் சாவடியில் போலீசார் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் தடுத்து விசாரித்தனர். அவர்கள் பாலக்காடு சேர்ந்த சதாம் உசேன் மற்றும் கொல்லம் சேர்ந்த ரோஷன் என அடையாளம் காணப்பட்டனர். விசாரணையில், இருவரும் தங்கம் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்ததால் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது.