இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. கோவையில் 16 தேர்வு மையங்களில் மொத்தம் 7,181 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்க இருந்ததால், காலை முதலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேர்வு மையங்களுக்கு அழைத்து வந்து வாழ்த்தி அனுப்பினர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி விமலா, தனது பேத்தி ஜோஷனாவின் தேர்வு வெற்றிக்காக தேர்வு மைய வாயிலில் அமர்ந்து ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி வந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனது பேத்தி இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதாகவும், இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் கடவுளை வேண்டி இவ்வாறு எழுதி வருவதாகவும் தெரிவித்தார். கடந்த முறையும் பேத்தி தேர்வு எழுதும்போது, அவர் மையத்திற்குள் சென்றது முதல் வெளியே வரும் வரை ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதியதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் தேர்வு மையத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், பேரன்பும் நம்பிக்கையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்பட்டது.



Leave a Reply