அத்திக்கடவு-அவிநாசி 2-ஆம் கட்ட திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தின்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2-ஆம் கட்டத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, தொண்டாமுத்தூர் தொகுதியில் விடுபட்டுள்ள 93 குளங்கள் மற்றும் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அவிநாசி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை இணைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள 2-ஆம் கட்டத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் முதற்கட்டப் பணிகளால் ஏற்பட்டுள்ள பயன்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், திட்டப் பாதைக்கான இழப்பீடு வழங்குவதில் உள்ள பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
2-ஆம் கட்டத் திட்டம் தொடர்பாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகள், நீரின் இருப்பு மற்றும் தேவை, திட்ட மதிப்பீடு உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் முதலமைச்சருடன் ஆலோசித்து, அத்திக்கடவு-அவிநாசி 2-ஆம் கட்டத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பேரவையில் உறுதியளித்தார்.



Leave a Reply