“நாம் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுத்திருக்கிறது” – கோவையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

Spread the love

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் கோவை சித்ரா அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழக மக்கள், 2014-ம் ஆண்டு மற்றும் 2019-ம் ஆண்டு பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை எடுத்து படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர்,
திமுகவினர் யாரும் தேர்தல் வாக்குறுதியை எடுத்து படியுங்கள் என்று கூற மாட்டார்கள். ஆனால் 90% வாக்குறுதிகளை செயல்படுத்தி விட்டோம் என்று கூறுவார்கள் என்றார். மக்கள் பாஜகவின் வாக்குறுதிகளை படித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோமா என்பதை சரி பார்க்கவும் என்று கூறிய அவர், பாஜக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

வாக்குறுதி அளித்தது போல், பொது சிவில் சட்டத்தை நிச்சயமாக பாஜக நிறைவேற்றும் என்றும் அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து, பாஜக அரசு தமிழகத்தில் நிறைவேற்றிய திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கோவைக்கு விரைவில் மெட்ரோ வரவேண்டும் என்பதற்கான எல்லாம் முயற்சியும் எடுத்து வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசுக்கு தமிழகம் கொடுத்த வரி குறித்தும், மத்திய அரசு தமிழக அரசிற்கு கொடுத்த நிதி குறித்தும் எடுத்துரைத்தார். நாம் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுத்திருப்பதாகவும் கூறினார். மேலும், பாஜக அரசின் 11 ஆண்டு சாதனைகளை புத்தக வடிவில் வெளியிட்டு இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், திமுக அரசு ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில், 512 தேர்தல் வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்திருக்கிறது என்றும் பாஜக ஆட்சி செய்கிற அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசும் பெட்ரோல் விலையை குறைத்திருக்கிறது என்றும் கூறிய அவர், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தும் சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்ற குற்றம் சாட்டினார்.

கோவை விமான நிலைய மேம்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கோவை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான ஆர்வம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், முழுமையாக நிலம் ஒப்படைக்கப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞரிடம் ஆவணங்களை கொடுத்து, அவரை மேல்முறையீடு செய்யச் சொல்வதற்கான வேலையில் தான் இறங்கி இருப்பதாகவும் கூறினார்.