கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கும் முன்னர் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தின் போது மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் மயானங்களில் நேரம் தொடர்பான விவாதத்தில், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்விகள் அவசியமா என கேட்டு ஆவேசமடைந்தார். இதற்கு, மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு “மாமன்றக் கூட்டத்தில் கேள்விகள் எழுப்புவது வழக்கமான ஒன்று” என பதிலளித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், குப்பைத் துறையில் தரம் பிரிப்பது குறித்த விவாதத்திலும் பரபரப்பு நிலவியது. திட்டங்கள் முறையாக செயல்படவில்லை என அதிமுக கவுன்சிலர் கூறியதைக் தொடர்ந்து, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் — காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்டவை — கடும் எதிர்வாதத்தில் ஈடுபட்டனர். கூட்டம் தேசிய கீதம் மூலம் முடிவடைந்தது.
அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், “கோவை மாநகராட்சியில் நடப்பது மாமன்ற கூட்டமல்ல, திமுக கொள்கை பரப்புக் கூட்டம்” என கடுமையாக விமர்சித்தார். மேலும், “மாநகராட்சி மேயரும், தமிழக முதல்வரைப் போலவே போட்டோ ஷூட் ஆட்சியில் ஈடுபட்டுள்ளார்” எனக் கூறினார்.
திமுக ஆட்சி வந்தபோதிலிருந்து மாநகராட்சியில் எதுவும் மாற்றமின்றி இருப்பதாகவும், அதிமுக ஆட்சிக்காலத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் குளங்கள் முறையாக பராமரிக்கப்பட்டதாகவும், தற்போது பராமரிப்பின்றி கிடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள் தற்போது நடைபெறாமல் போனது தொடர்பாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். “இன்று நடைபெற்ற கூட்டம் நூற்றுக்கணக்கான விஷயங்களை விரைவாக முடித்து வைக்க ஒரு திட்டமிட்ட நிகழ்வாக இருந்தது,” எனவும் குற்றம்சாட்டினார்.
Leave a Reply