இந்தியா–-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் சமீபத்தில் உச்சத்தை எட்டியிருந்த நிலையில், இரு நாடுகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த ஒப்புக்கொண்டன.
ஆனால், இந்த போர்நிறுத்த அறி விப்புக்குப் பிறகு, அதே நாள் இரவு பாகிஸ்தான் மீண்டும் எல்லை ஒட்டி உள்ள ஜம்மு-காஷ்மீர், சம்பா, கதுவா உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் வழியாக தாக்குதல்களை மேற்கொண்டது.
இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என இந்திய பாதுகாப்பு தரப்பினரால் கண்டிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல், எல்லை மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் எந்தவிதமான தாக்குதலும் நடைபெறவில்லை என அதிகாரப்பூர்வமாக மாவட்ட நிர்வாகங்களும் காவல்துறையும் உறுதி செய்துள்ளன.
இதன் அடிப்படையில், முன்னெச்சரிக்கையாக விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் மக்கள் மீதான கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டன.
போர் பதற்றத்தின் போது ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகி வருவதால் மின்விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ட்ரோன்களின் நகர்வு இல்லை என காவல்துறை தரப்பும் உறுதி செய்துள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்தியா பாகிஸ்தானுக்குள் 9 தீவிரவாத முகாம்களை தாக்கியது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டது. பாகிஸ்தான் அதற்கு கடுமையான பதிலடி அளித்தது. ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.
ஆனால் இந்திய ராணுவம் எல்-70, சில்கா, எஸ்-400 உள்ளிட்ட உயர் நவீன ஆயுதங்களால் பதிலடி கொடுத்து ட்ரோன்களை அழித்தது.
அமெரிக்காவின் தலையீட்டால் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில் இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
ஆனால், அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த ஒரே சில மணி நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டது.இப்போது ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியுள்ளது.
பாதுகாப்பு படைகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மக்கள் மீண்டும் வழக்கமான வாழ்க்கையை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் எல்லையில் மெல்ல திரும்புகிறதா இயல்புநிலை???

Leave a Reply