இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் மட்டும் 14 தேர்வுத் தளங்களில் இந்தத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 6,994 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுள், சாய்பாபா காலனியைச் சேர்ந்த 22 வயதுடைய திருநங்கை இந்திரஜா இந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்கும் தமிழகத்தின் முதல் திருநங்கை என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
தம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் நலனுக்காக மருத்துவராக வேண்டும் என்பதே தனது கனவெனக் கூறும் இந்திரஜா, 2020-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடித்தார். கடந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வை எழுதிய இவர், 40% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றாலும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
இந்த ஆண்டும் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வில் பங்கேற்கிறார். “1.1% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்வி பெறுவேன் என நம்புகிறேன். கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி எனக்கான தேர்வுத் தளமாக ஒதுக்கப்பட்டுள்ளது. என் பெற்றோர் உற்சாகமாக ஆதரித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார் இந்திரஜா.
நீட் தேர்வில் பங்கேற்கும் தமிழகத்தின் முதல் திருநங்கை கோவையைச் சேர்ந்த இந்திரஜா

Leave a Reply