“டிராகன்” ஸ்டைலில் வேலைவாய்ப்பு – 15 நாட்களில் சிக்கிய தெலுங்கானா இளைஞர்!

Spread the love

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெறவே, தனது நண்பனைப் பயன்படுத்தி மெய்நிகர் நேர்காணலுக்கு ஆள்மாறாட்டம் செய்த கதை – ஆனால் அந்தக் கோலிவுட் பாணி குற்றம், வெறும் 15 நாளிலேயே கரிகாலமாக முடிந்துவிட்டது!

ஹைதராபாத் அருகே வசிக்கும் 20 வயதுடைய ராபா சாய் பிரசாந்த், ஒரு தனியார் வேலைவாய்ப்பு தளத்தின் மூலம் மென்பொருள் நிறுவனமான சம்பரதா டெக் வழியாக இன்ஃபோசிஸில் வேலைக்கு விண்ணப்பித்தார். செம்மையாக ஆவணங்களை சமர்ப்பித்து, ஜனவரி 20, 2025 அன்று மெய்நிகர் நேர்காணல் நடைபெற்றது. ஆனால் அந்த நேர்காணலில் திரையில் பிரசாந்த் இல்லை – அவரின் நண்பர் நடித்தார்! திறமையாக நேர்காணலை வெற்றி கொண்டு சலுகைக் கடிதமும் வந்தது.

வேலையில் சேர்ந்த பிறகு, பிரசாந்தின் தகவல் தொடர்புத் திறன்கள் நிறுவன ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. “அவர் கல்வியில் திறமைசாலி என்றாலும், நேர்காணலில் காட்டிய திறன்கள் வேலைக்கு சேர்ந்ததும் காணவே இல்லை,” என போலீசார் தெரிவித்தனர்.

மெய்நிகர் நேர்காணலின் ஸ்கிரீன்ஷாட்கள், பின்னர் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டன. அதில் பிரசாந்தின் முகம் இல்லையென்பதும், வேறு ஒருவர் இருந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆள்மாறாட்டம் உறுதியானவுடன், இன்ஃபோசிஸ் பிரசாந்தை பணிநீக்கம் செய்தது.

ஆனால் அதோடு முடிந்துவிடவில்லை! ஹைதராபாத் திரும்பிய பிரசாந்த், 15 நாள் வேலை செய்ததாக சம்பளத்தை கோரியதாம். இதனால் இன்ஃபோசிஸ் மேலாளர் போலீசில் புகார் செய்தார். தற்போது ஐ.டி சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 318 மற்றும் 319-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரசாந்த் சட்ட சிக்கல்களில் சிக்கியுள்ளார்.

இந்தக் கதை, வேலைவாய்ப்பில் நேர்மை மற்றும் திறமையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது – “டிராகன்” படத்தில் வருவது மாதிரி ஒரு சதி ஒருவேளை வெற்றியளிக்கலாம், ஆனால் அது வெகு நாள் நீடிக்காது என்பதற்கு மேற்கண்ட சம்பவம் உதாரணம்.