கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில், பூட்டிய வீட்டில் இருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை கடுமையாக கலங்கவைத்துள்ளது. இந்த நிகழ்வில் ஒரு பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடையின் உரிமையாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் துடியலூர் பகுதியில் இணைந்து பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடையை நடத்தி வந்தனர். வழக்கமாக காலை நேரத்தில் கடையை திறக்கும் இவர்கள், இன்று காலையில் கடைக்கு வராததையடுத்து, கடை ஊழியர்கள் சந்தேகமடைந்தனர்.
உடனே அவர்கள் விஸ்வநாதபுரம் பகுதியில் ஜெயராஜ் மற்றும் மகேஷ் வாடகைக்கு குடியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகவும், ஜெயராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவும் காணப்பட்டார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே துடியலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து துணை ஆணையர் சிந்து தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தடயங்களை கண்டறியும் வகையில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வழிமறை சேகரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில், மகேஷ் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகியதாகவும், அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த உறவை ஜெயராஜ் விரோதப்பட்டு, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மகேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் மகேஷை கொலை செய்துவிட்டு ஜெயராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மர்ம மரணங்கள் துடியலூர் பகுதிக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விசாரணை தொடரும் நிலையில், உண்மையான காரணம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply