பா.ஜ.க புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – அண்ணாமலை

annamalai
Spread the love

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சரித்திரத்தைக் குறிப்பிட்டார். Amendment 2025 ஜனநாயக முறையில் நிறைவேறி, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. Waqf சட்டத்திருத்தம், ஏழை இஸ்லாமிய மக்களுக்கு பெரும் நன்மை விளைவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சில கட்சிகள் இதற்கு எதிராக குழப்பங்களை உருவாக்கி வருகின்றன. இந்த சட்டம் 1913 முதல் 2025 வரை பல்வேறு மாற்றங்களை கடந்து வந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 21 லட்சம் ஏக்கர் waqf சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் கோவில் நிலங்கள், கிராமங்கள் கூட waqf சொத்தாக அறிவிக்கப்பட்டதால், மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. புதிய சட்டத்திருத்தம் மூலம் அரசின் சொத்துகளை பாதுகாக்கும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்தின் மூலம் waqf சொத்துகளை நிரூபிப்பது, வழங்குவது, பராமரிப்பது பற்றிய தனித்துவமான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை waqf board-ல் சியா, சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மற்ற பிரிவினரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட board-ல் கண்காணிப்பு பதவிகளை வகிக்கலாம். கிறிஸ்தவ மதத்தினர் இதை பெரிதும் வரவேற்றுள்ளனர், ஏனென்றால், கடந்த காலத்தில் அவர்களின் சர்ச்சுகளின் சொத்துகளும் waqf board-ஆல் கைப்பற்றப்பட்டிருந்தன. தற்போதைய திருத்தச்சட்டத்தால் அவர்கள் தங்கள் சொத்துக்களை மீட்டெடுக்க வழி அமைந்துள்ளது.

அண்ணாமலை, மருதமலை முருகன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகம் தொடர்பாக தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார். பக்தர்கள் படிக்கட்டுகளில் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டதை அவர் கண்டித்தார். அமைச்சர் சேகர்பாபுவின் குடும்பத்தினர் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், பக்தர்களுக்கு தரிசனம் செய்ய கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறினார். 750 சிறப்பு தரிசன பாஸ் தி.மு.க. ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இது கோயில் நிர்வாகத்தை அரசே முறையற்ற விதத்தில் கட்டுப்படுத்துவதை காட்டுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார். இதனை எதிர்த்து பா.ஜ.க. கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை” என்று உறுதியாக தெரிவித்தார். “நான் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். இந்த கட்சியில் பலர் தங்களது உயிரை கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். எனவே, கட்சி எவ்விதத்திலும் பலம் பெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்” என கூறினார்.

தமிழகத்தில் Waqf சட்டத்திற்கெதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, “போராட்டம் செய்வது தவறு இல்லை, ஆனால் எந்த அடிப்படையில் போராடுகிறீர்கள்? எந்த அம்சத்தில் தவறு உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். “​ எதற்கு போராட்டம் செய்கிறோம் என தெரியாமலே போராட்டம் செய்யும் ஒரு கட்சினா அது த.வெ.க. தான்​. இந்த சட்ட திருத்தத்துக்கு ஒரு கோடி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனவே, அவர்கள் உண்மையில் என்ன எதிர்க்கிறார்கள் என்பதே புரியவில்லை” என்று கூறினார்.

நீட் தேர்வு தொடர்பாக, “நீட் என்பது தமிழக மாணவர்களுக்கு நல்லது என்ற உண்மையை ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டார். முதலமைச்சரின் நீட் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று அண்ணாமலை குறிப்பிட்டார். “அவர்கள் நிஜமாகவே நீட்-ஐ எதிர்க்க விரும்பினால், நேரடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லட்டும். ஆனால், அவர்கள் அங்கு செல்ல மாட்டார்கள், ஏனென்றால் நீட் தேர்வு அதே நீதிமன்றத்திலிருந்துதான் உருவானது” என சவால் விட்டார்.

தி.மு.க. அரசின் 13 அமைச்சர்கள் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆனால், முதலமைச்சர், “டாஸ்மாக் வழக்கை மட்டும் பக்கத்து மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்” என வலியுறுத்துவது ஏதோ மறைக்க ஒரு முயற்சி என கூறினார். “நீதி மன்றத்தில் பயம் இல்லையென்றால், ஏன் டாஸ்மாக் வழக்கை மட்டும் பக்கத்து மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை, “நான் ஊழலை எதிர்க்க வந்தவன், எந்த நிலைமையிலும் சமரசம் செய்ய மாட்டேன். தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சியை கொண்டு வர எனது முயற்சி தொடரும்” என்று உறுதியளித்தார். “2026 தேர்தல் தமிழக மக்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான ஒன்று. நான் ஒரு தொண்டனாக கட்சியின் பணியை செய்துவிட்டு செல்வேன்” எனக் கூறினார்.