கோவை மாநகராட்சியின் 2025-26க்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் சிவ.குரு.பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன், நிதிக் குழு தலைவர் முபஷீரா முன்னிலையில் நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார்.
2025-26 நிதி ஆண்டின் வருவாய் வரவினம், மூலதன வரவினம் என மொத்தம் ரூ.4 ஆயிரத்து 617.33 கோடி எனவும் , வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் என மொத்தம் ரூ.4 ஆயிரத்து 757.16 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பற்றாக்குறை ரூ. நூற்றி 39.83 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ஒரே சமயத்தில் 200 முதல் 400 எண்ணிக்கையிலான 4-சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ.10 கோடியிலும் ரூ 15 கோடியில் ராஜவீதியிலும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்படும். கே.ஜி.தியேட்டர் சாலையில் எதிரே வாகனங்களை நிறுத்தம் ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு காலி இடத்தில் 2 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூ. 8 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். கோவையின் முக்கிய சாலையான காந்திபுரம் நஞ்சப்பா சாலை, கிராஸ்கட் சாலை சந்திப்பில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரூ.8 கோடி மதிப்பில் ஸ்கை-வாக் பணிகள் செய்யப்படும்.
சாலைகள் ஐஸ்வரியா நகர் முதல் மருதமலை சாலை வரை உள்ள 30 அடி அகல திட்ட சாலை; சரவணம்பட்டி துடியலூர் பிரதான சாலை முதல் மீனாட்சி நகர் வழியாக அண்ணா நகர் வரை 60 அடி அகல திட்ட சாலை; துடியலூர் சரவணம்பட்டி பிரதான சாலையை இணைக்கும் தென்வடல் திட்டசாலை ஆகிய மூன்று திட்ட சாலை
களுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு கோரி தமிழக அரசுக்கு அனுப்பப்படும்.
கல்வி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்வியில் சேருபவர்களுக்கு அவர்களது முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் மட்டும் ஒரு மாணவருக்கு ரூ. 25,ஆயிரத்திற்கு மிகாமல் செலுத்தப்படும். மேலும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கும் நிதி வழங்கப்படும் இதற்காக ரூ. 10 லட்சம் ஒதுக்கப்படும். 10,12 மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 சத மதிப்பெண்கள் பெரும் மாணவர் மாணவியர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். செஸ் பயிற்சியில் ஆர்வமும் திறனும் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செஸ் பயிற்சி வழங்கப்படும். இதே போல கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி உபகரணங் களுக்காக ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கப்படும். வ உ சி பூங்காவில் ரூ.6 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் பிரத்தியேக பறவைகள் கண்காட்சி கூடம் அமைக்கப் படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளது.
அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக குழு தலைவருமான பிரபாகரன் பட்ஜெட் குறித்து கூறுகையில், டாஸ்மார்க் கடை 12 மணிக்கு திறப்பது போல, மதியம் 12 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். கடந்த பட்ஜெட்டில் 3300 கோடி வருமானம் என்றனர். இந்த ஆண்டு 4700 கோடி. ரூ.1000 கோடி அதிக வருவாய் வந்தும், ரூ.139 கோடி பற்றாக்குறை என தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சி மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட் இது. எல்லா அறிவிப்புகளும் டிசைன் டிசைனாக கலர் கலராக பேப்பர் அளவில் மட்டுமே உள்ளது.
சீதாலட்சுமி மருத்துவமனையை மேம்படுத்தவும், அங்கு டயாலிசிஸ் சென்டர் அமைக்கவும் கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியிட்டனர்.அதே அறிவிப்பு இப்பொழுதும் வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி குப்பைகளை அள்ளுவதற்கு, அனுபவமே இல்லாத தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இதில் 170 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. அதேபோலத்தான் வெள்ளலூர் குப்பை கிடங்கு சுத்திகரிப்பதிலும் பழைய அறிவிப்பே தற்பொழுதும் பட்ஜெட்டில் உள்ளது. நகரின் முக்கிய இடங்களான கோவைப்புதூர், பீளமேடு, கவுண்டம் பாளையம் ஆகிய மூன்று இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்க பட்ஜெட்டில் உள்ளது. இதனை வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியிலேயே செய்ய வேண்டியது தானே? மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட்டில் தேவையில்லாமல் லே-அவுட் தொடர்பான சப்ஜெக்ட் கொண்டு வந்துள்ளனர். இது போல எவ்விதத்திலும் நன்மையில்லா பட்ஜெட் இது என்றார்.
பட்ஜெட் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி வளாகத்தில் கலர் பேப்பர்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி பகுதியில் உள்ள 32 சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை, நிறைவேற்றவில்லை என அத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் ,தாய் சேய் கால் சென்டர் அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது அது இப்போதும் வெளியிடப்பட்டுள்ளது.
நீர் நிலைகளை மேம்படுத்த எந்தவித அறிவிப்பும் இல்லை என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply