கோவை மாவட்டத்திற்கு நீராதாரமான சிறுவாணி அணையில் இருந்து 30 எம்எல்டி நீர் கேரளா அரசால் குறைக்கப்பட்டுள்ளது என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கோவை மாவட்டத்திற்கு முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையிலிருந்து கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளொன்றுக்கு 77 எம்எல்டி வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் வரை 77 எம்எல்டி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 47 எம்எல்டி தான் வழங்கப்பட்டு வருகிறது. 30 எம்எல்டி கேரளா அரசால் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், கிராம பஞ்சாயத்திற்கு அந்த வழியாக இருக்கக்கூடிய 10 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள்-தொண்டாமுத்தூர், தென்கரை, வேடப்பட்டி, தாளியூர், பூலுவப்பட்டி, பேரூர், ஆலந்துறை போன்ற 7 பேரூராட்சிகளிலும் 18 எம்எல்டி வழங்கப்பட்டு வந்தது. அதிலும் 6 எம்எல்டி குறைத்து 12 எம்எல்டி ஆக வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து கேரள அரசுக்கு ரூ.13 கோடி தொகை கட்டாத காரணத்தினால் 36 எம்எல்டி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தற்போது ரூ.6 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. எனவே, மீதிப் பணத்தையும் செலுத்தியோ, இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை மூலமாகவோ உடனடியாக, முழுமையாக 77 எம்எல்டி-யும், அதேபோல், 18 எம்எல்டி கிராமங்களுக்கும் வழங்க அரசு ஆவன செய்யுமா என பேசினார்.
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணிக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது:
கேரளாவில் இருக்கிற, சிறுவாணியில் இருக்கிற தண்ணீர் ஒவ்வொரு வருடமும் மழைக் காலத்திலே தேவையான அளவுக்கு முழு கொள்ளளவு நிரப்புவதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. கேட்கின்றபோது ஆழியாறிலே இருக்கின்ற பிரச்சினையைத் தீர்த்தால்தான் இங்கே தருவேன் என்று சொன்னார்கள்.
நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவரோடு தொடர்புகொண்டு, நேரடியாக முதல்வருடன் பேசி அங்கு தண்ணீர் ஓரளவுக்கு நமக்கு தந்து கொண்டிருக்கிறார்.
எனவே, கோவையைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களுக்கு பில்லூர் 1,2,3, சிறுவாணி என 4 இடங்களிலுமே 380 எம்எல்டி-க்கு மேலாக கோவை நகருக்கு தந்துகொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு கோவை மாநகருக்கு ஏற்கெனவே, கொடுப்பதைவிட கூடுதலாக தண்ணீர் எல்லாம் நிறைய இருக்கிறது. இப்போதுகூட நகராட்சிகளுக்கு அதை திருப்பி அனுப்புவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, இப்போது ரூ.8.9 கோடி கொடுப்பதற்கும் துறையின் செயலர் சொல்லி இருக்கிறார். பணம் அனுப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் உங்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
சிறுவாணி அணையில் 30 எம்எல்டி நீர் குறைப்பு : தொடர் நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் எஸ்.பி.வேலுமணி கேள்வி ?

Leave a Reply