, , ,

திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்….

tamil
Spread the love

தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து, ஆட்சியா் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன. திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல்வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம். குறள் எண். குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்பெறும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் மாவட்டத்தில் அமைக்கப் பெற்றுள்ள திறனறிக் குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப் பெற்று குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை தமிழ்வளர்ச்சி இயக்குநருக்குக் கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்பெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.