,

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

edappadi palaniswamy
Spread the love

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்த திமுக அரசு அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்குவதுடன், எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.