சூரியச் சுடரொளியே ; சுகமாய் வந்து போ….! 

summer heat
Spread the love

ஆ.வெ.மாணிக்கவாசகம்

” வெயிலை நான் மிகவும் ரசிக்கிறேன்…!
நீண்ட நேரம் போகும் போது உன் நிழல் –
என் மீது உரசிச் செல்லும் என்பதால்….!!”
-ஜெர்சியின் கவிதை வரிகள் இவை.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் .
இவ்வளவு மிக, மிக நீண்ட நெடிய தூரத்திலிருந்து சூரிய சுடரொளி நம்மை பதம் பார்த்து வாட்டி,வதைத்துக் கொண்டிருக்கிறது.
“எத்தனை டிகிரி வெயில் அடித்தாலும், நம் வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; ஆனால் மழை என்று வந்து விட்டால், அனைத்து பணிகளும் ஸ்தம்பித்துப் போய் விடுகிறது”
.
இப்படி நம்மில் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம்.
தற்போது இதற்கு நேர்  மாறான சூழல்  உள்ளது.
நம் இந்தியா முழுவதும் மார்ச் மாதம்  தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது.
இந்தத் தாக்கம் ஏப்ரல் முதல் வாரம், முதல்  படிப்படியாக அதிகரித்து வெப்ப அலையாக  அதிக அளவில்  உருவாகியுள்ளன.
பொதுவாக ஏப்ரல், மே ,ஜூன் மாதங்களில் கோடை வெயில் சற்று அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் தெரிந்தது தான்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலைகள் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநில புவனேஸ்வர்,
ஆந்திர மாநிலம் கடப்பா ஆகிய. இடங்களில் 110.84 டிகிரி பாரன் ஹீட் வெயில் கொளுத்துகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-வது வாரம் முதலே சென்னை, வேலூர், கடலூர், சேலம்,தர்மபுரி, ஈரோடு கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூரியன் சுட்டெரிக்க தொடங்கி, வெப்ப அலையாக காட்சி தருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 109.40 ,தாராபுரத்தில் 107.60 டிகிரி பாரன் ஹீட் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
கோவை மாவட்டத்தில் 103 டிகிரி பாரன் ஹீட் பதிவாகியுள்ளது.
கர்ப்பிணிகள்
 வெயிலை சமாளிப்பது குறித்து பொது மருத்துவர் சுப்ரமணியம் கூறுகையில்,
மற்றவர்களை காட்டிலும் கர்ப்பிணிகள் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும். தேவைக்கேற்ப நீர் மோர், இளநீர், பழச்சாறு, எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை பருக வேண்டும்.
அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக இந்த நேரங்களில், தண்ணீர் குடித்தால் கர்ப்பிணிகளுக்கு வாந்தி ஏற்படும் .இதனால் சிலர் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கின்றனர்.
இது பிரசவ காலங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் பனிக்குடத்தில் உள்ள குழந்தைக்கு தேவையான தண்ணீர் வேண்டும். வெப்பம் தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால், தனியாக செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
1 வயது குழந்தை
பிறந்து ஆறு மாத முதல் ஒரு வருடமான குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
தினமும் இரு முறை லேசான சுடுநீரில் குழந்தையை குளிக்க வைக்க வேண்டும். வியர்வை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பருத்தியினால் நெய்யப்பட்ட துணிகளை அணிவித்தல் வேண்டும்.
பள்ளிக் குழந்தைகள்
தற்போது கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகள் குதுகலிப்பாக இருப்பர்.
அவர்களை மதிய வேளைகளில் வெளியில் விளையாட அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
வியர்வையால் உடலில் இருந்து தாது உப்பு வெளியேறி பாதிப்பு ஏற்படுத்தும்.
பாட்டில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை வாங்கி கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பழச்சாறு, இளநீர் ,நுங்கு,கம்பங்கூழ், எலுமிச்சை சாறுடன் சர்க்கரை, உப்பு  சேர்த்து கொடுக்க வேண்டும்.
தோல் நோய்கள், அம்மை ,வேர்க்குரு  ஆகியவைகள் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல  வேண்டும்.
வயதானவர்கள்
வயதானவர்களுக்கு தோல் மிக வறண்டு இருக்கும்.
இதனால் சர்ம பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
 வெளியில் செல்வதை தவிர்த்து பருத்தியினால் ஆன வெள்ளை உடைகளை அணிந்தால் சிறப்பாக இருக்கும்.
கோடைகாலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மலச்சிக்கல் வருவது வழக்கமான ஒன்று. இதனை தவிர்ப்பதற்காக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் வாழைப்பழத்தையும் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோடை காலங்களில் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .
அதிகமான நீர்மோர், இளநீர், பழச்சாறுகளை பருக வேண்டும் என டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.
அக்னி நட்சத்திரம்
கத்திரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் வரும்.
இந்த கால கட்டங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக காணப்படும்.
வரும் மே மாதம் 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை வரவுள்ளது.
 மனித உடலின் வெப்பநிலை
மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். சுற்றுப்புற சூழ்நிலைகளால் சராசரியை விட வெப்ப நிலை  அதிகரித்தால் வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம்.
பொது சுகாதாரத்துறை அறிவுரை
* வெளியில் செல்லும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெறும் காலுடன் நடக்கக்கூடாது
* செயற்கை குளிர்பானங்கள், மது, புகையிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
* வெளியில் செல்லும்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
* சோர்வாக இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.
* உடலில் வெப்பநிலை அதிகரித்தால் 108 அவசர வாகனத்தை அழைக்க வேண்டும்.
* குழப்பமான மனநிலையில் உள்ளவர்களை பார்த்தால் அவர்களுக்கு மற்றவர்கள் வழி காட்ட வேண்டும்.
முதலமைச்சர் அறிவுரை
கோடை வெயில் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும். அவர்களின் வசதிக்காக சாலையோரம் ,சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட உள்ளது. மயக்கமோ சோர்வாகவோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
உப்பு கரைசல் நீர்,மருந்து மாத்திரைகள்  உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்
இந்த கோடை கால வெப்பத்தினை தவிர்க்க அதிமுகவினர் ஆங்காங்கு தண்ணீர் பந்தல் அமைத்து, நீர்மோர், தர்பூசணி, பானகம், இளநீர் உள்ளிட்டவர்களை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கம் இருக்கும் வரை கட்சியினர் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும்.