, , ,

தமிழக எழுச்சிக்கு வித்திட்ட அண்ணாமலை பாத யாத்திரை

என் மண் என் மக்கள் யாத்திரை
Spread the love

ஆ.வெ.மாணிக்கவாசகம்

அரசியல் வரலாற்றில் “பாத யாத்திரை  ” – நிகழ்வுகள் மிகவும் முக்கிய இடம் பெற்றதாகும் . மேலும் சக்தி வாய்ந்த அரசியல் நடவடிக்கைகளில் பாத யாத்திரையும் ஒன்றாகும்.
1930-ம் ஆண்டு மார்ச் 12- ம் தேதி தேசத்தந்தை அண்ணல் காந்தி மகான், ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து, குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை வரை  24 நாட்கள் 386 கிலோ மீட்டர் தூரம் தமது தொண்டர்களோடு பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை இந்தியா முழுவதும் அனைவரின் ஆதரவை அதிகமாக  பெற்றது. மேலும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் நிகழ்வினை மகாத்மா செய்து காட்டினார்.  காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் தேச பக்தர்கள் வேதாரண்யத்தில் யாத்திரை மேற்கொண்டனர்.
1938-39 ஆண்டுகளில் தமிழர் படை சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக  மூவலூர் இராமாமிர்த அம்மையார்  உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்றது சிறப்பாக நிகழ்வு .
இந்தியா விடுதலை அடைந்த போது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் மதக் கலவரம் ஏற்பட்டது.
கலவரத்தை கண்டு  மனம் வெந்த காந்தி மகான் நவகாளியிலிருந்து ,மேற்கு வங்கம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
1982-ம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மதுரையில் நடைப்பயணம் நடத்தினார். 1983 ல் ஜனதா  கட்சித் தலைவர் சந்திரசேகர் கன்னியாகுமரி முதல் தலைநகர் டெல்லி வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர்  பாத யாத்திரை சென்று வரலாறு படைத்து இந்திய பிரதமர் ஆனார்.
1994-ம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அப்போதைய ஜெயலலிதா அரசை எதிர்த்து கன்னியாகுமரி முதல் சென்னை வரை 1500 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளுக்காக வைகோ பலமுறை பாத யாத்திரை சென்றவர்.
2016-ம் ஆண்டு அப்போதைய திமுக பொருளாளரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின்,கன்னியாகுமரி முதல் சென்னை வரை நமக்கு நாமே நடைப்பயணத்தை மேற்கொண்டார்.
காவிரி உபரி நீர் திட்டத்தை அமல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி வரை நடைப்பயணம் மேற்கொண்டவர் ஆவார்.
2022-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா யாத்திரையினை மேற்கொண்டார். தற்போது அவர் இந்தியாவின் மத்திய பகுதிகளில் யாத்திரை சென்று கொண்டுள்ளார்.
இது போல பாத யாத்திரை சென்ற எண்ணற்ற  தலைவர்கள் உண்டு.இந்த பாதை யாத்திரையின் மூலம் தலைவர்களின் கோரிக்கைகள், எழுச்சி உள்ளிட்டவைகள் நிகழ்ந்துள்ளன.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை  கடந்த ஆண்டு 2023 ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து “என் மண் என் மக்கள்” என்ற பாத யாத்திரையினை தொடங்கினார்.உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்த இந்த யாத்திரை தமிழகத்தில் உள்ள 234  தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாக  சென்று நிறைவடைந்துள்ளது.
யாத்திரை துவங்குவதற்கு முன் பல இடங்களில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட அனைவருமே இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்ளலாம் என்ற அறைகூவல் விடுத்தார்.
இதனை ஏற்று அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமல்லாது ,பொது மக்கள்,
நடுநிலையாளர்கள் என பலரும் பாத யாத்திரையில் பாங்குடன் பங்கு கொண்டனர். முதல் கட்ட பாத யாத்திரை  நெல்லையில் நிறைவடைந்த போது, தமிழக மக்கள் மத்தியில் அண்ணாமலையின் பாத யாத்திரை பேசு பொருளானது.
செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்க யாரும் இருக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
ஆனால் அவர்களின் கருத்துக்களை காதில் போடாது, தன்னெழுச்சியாக திரண்டு  வந்த கூட்டத்தைக் கண்டு பலரும் வியந்தனர்.
ஆண்களை விட பெண்களே, அண்ணாமலையின் பேச்சினை கேட்க கைக் குழந்தைகளுடன் அதிகம் திரண்டனர்.
பொதுவாக பெண்கள் அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டாதவர்கள்.ஆனால் அண்ணாமலையின் மேன்மையான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு பாத யாத்திரைக்கு படையெடுத்ததை  கண்கூடாக காண முடிந்தது.
தமது ஐம்பதாவது பாத யாத்திரையினை  ராசிபுரம் தொகுதியில் நிறைவு செய்து, நூறாவது  நிகழ்வினை ஸ்ரீரங்கம் தொகுதியில் பயணித்தார்.
ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசும் போது,    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்த உடன் இந்த ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்படும் எனவும், அறநிலைத்துறையினை நீக்கி விடுவோம் என பேசியது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
யாரும் பேசத் துணியாததை, அதுவும் திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது பெரியார் சிலை குறித்து பேசியது அண்ணாமலை பெரும் துணிச்சல்காரர் தான் என பலரும் வியந்தனர்.
யாத்திரையின் போது, தன்னை சந்திக்க வரும்,பொது மக்களிடம் கணிவான பேச்சு, அன்பான விசாரணை, மகிழ்ச்சியாக “செல்பி” எடுத்தல் என அண்ணாமலையின் அணுகு முறையை அனைவருமே பெரிதும் ரசித்தனர்.
குழந்தைகள் வரும் போது ,அவர்களுக்கு பரிசு பொருட்கள், சாக்லெட் ஆகியவை கொடுத்து குழந்தைகளின் மனங்களிலும் நீங்க  இடம் பிடித்து விட்டார் அண்ணாமலை.
மேலும் அவர்கள் பங்கேற்ற போட்டிகளில் வென்ற பரிசுகள், சான்றிதழ்களை காண்பித்து  பரவசப்பட்டுக் கொண்டனர்.
பல இடங்களில் குழந்தைகள்  கடவுளர்களின் வேடம்,  பாரத மாதா, தேசத் தலைவர்களின் வேடமணிந்து பாத யாத்திரையினை வரவேற்றனர். பாத யாத்திரை நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் நடந்த போது  பிரதமர் மோடி பங்கேற்று, எழுச்சியுரையாற்றினார்.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் தொடங்கப்பட்ட அண்ணாமலையின் பாத யாத்திரையின் , நோக்கம் முழுமையாக நிறைவேறி உள்ளது. எந்த மதத்தையும் இழிவு படுத்தாமல், சிறுபான்மை மக்கள் எல்லாம் பாராட்டும்படியாக பாத யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. தமிழக மக்களிடையே  எழுச்சியினையும் ஏற்றத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.