மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் மற்றும் மேயர் அறைக்கு அருகே தீக்குளிக்க முயன்ற கோவை குண்டு வெடிப்பு கைதியை காவல்துறையினர் கைது செய்தனர்
கோவை உக்கடம் ரேஷ்மா கார்டன் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாசர்(47). இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான இவர் தற்போது அக்கட்சியின் மாநில பேச்சாளராக இருக்கிறார். மேலும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலை பெற்றவர். இவர் வசிக்கும் உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உக்கடம் கழிவுநீர் பண்ணையில் கழிவுநீர் சரியாக சுத்தம் செய்யப்படாமல் திறந்து விடப்பட்டதால், தண்ணீர் ரேஷ்மா கார்டனுக்குள் புகுந்ததால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என நாசர் அறிவித்திருந்தார். இந்நிலையில், கையில் டீசல் கேனுடன் மாநகராட்சி அலுவலக விக்டோரியா ஹால் அருகேயுள்ள சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து மாநகராட்சி அலுவலகத்துக்குள் நாசர் நுழைந்தார். பின்னர் தனது கையில் வைத்திருந்த கேனை திறந்து டீசலை தனது மீது ஊற்றியபடி, மேயர் அறையை நோக்கி ஓடினார்.
தொடர்ந்து தன் மீது தீயை பற்ற வைக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் ஓடி சென்று அவரை பிடித்து தடுத்து நிறுத்தி மீட்டனர். உக்கடம் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் நாசர் நேற்று முன்தினம் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக கோவை மாநகராட்சி உதவி பொறியாளர் ஜீவராஜ்(58) உக்கடம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாசரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply