, ,

மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது – சீதாராம் எச்சூரி குற்றச்சாட்டு

sitaram yechuri
Spread the love
மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என்று சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 5 மாநில தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவுக்கும் சாதகமாக கருத்துக் கணிப்புகள் அமைந்திருக்கிறது. எல்லா கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக இல்லை, சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநிலங்களில் சாதகமற்ற நிலை இருக்கிறது. எனினும் இவை மாறுதலுக்கு உட்பட்டதா என்பதை தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஜி 20 மாநாட்டில் இந்தியா தலைமை வகித்ததால், முன்னிலை வகிப்பதாக பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் ஜி.டி.பியில் 20வது இடத்தில், அதாவது கடைசி இடத்தில் இந்தியா உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை எட்டும். இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சிகளை மிரட்ட ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சி.பி.எம்  மாநில செயலாளர் கே‌.பாலகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.