கோவை ஸ்டேன்ஸ் ஐசிஎஸ்சி பள்ளியின் 2026–2027 கல்வியாண்டிற்கான ஆண்டு பரிசளிப்பு விழாவும், கலைநிகழ்ச்சிகளும் பள்ளி வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவிற்கு சாந்தி ஆஷ்ரம் தலைவரும், பன்னாட்டு குழந்தைகள் மற்றும் பொதுச் சுகாதார மையத்தின் நிறுவனருமான டாக்டர் கெசெவினோ ஆரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக, பள்ளியின் துணைத் தலைமை மாணவர் ஆரோன் யோஹான் ஜோசப் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ் வரவேற்புரையாற்றி, பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
சிறப்புரையாற்றிய டாக்டர் கெசெவினோ ஆரம், மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி சமூகப் பொறுப்புணர்வு, மனிதநேயம் மற்றும் நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. “சிறிதளவு கருணையைக் காட்டுவோம்”, “கால்பந்து கொண்டாட்டம்”, “சித்திரக் கதாபாத்திரங்களின் வண்ணத் திருவிழா”, “எதிரொலிகள்” ஆகிய கருப்பொருள்களில் நடைபெற்ற நடனம், இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
விழாவில் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர் பிலிப் ஆர். ஜே. பவுலர், கௌரவப் பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஜே. ஞானதாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி வி. எம். ஜான், ஆங்கிலோ-இந்தியப் பிரிவு முதல்வர் பி. ஏ. ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளி முதல்வர் ஐலின் ஜெத்ரோ, ஸ்டேன்ஸ் பன்னாட்டுப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் திரளாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளியின் தலைமை மாணவர் நோயல் வின்சென்ட் கூடின்கோ மற்றும் தலைமை மாணவி அவந்திகா பி. ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.



Leave a Reply