விபத்தில் சிக்கிய மணமகள் – மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன்

Spread the love
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த மணமகள் விபத்தில் கடுமையாக காயமடைந்ததால், மருத்துவமனையிலே திருமணம் நடந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழா கொம்முடியைச் சேர்ந்த ஆவணி மற்றும் தம்பொலியைச் சேர்ந்த ஷரோன் ஆகியோரின் திருமணம் சக்தி ஆடிட்டோரியத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அதிகாலையில் அலங்காரத்திற்காக குடும்பத்தினருடன் காரில் புறப்பட்ட ஆவணி, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் சிக்கினார்.

உள்ளூர் மக்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, காயமடைந்தவர்களை கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினர். பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக ஆவணியை கொச்சி வி.பி.எஸ். லேக்ஷோர் மருத்துவமனைக்கு மாற்றினர். ஆவணிக்கு முதுகுத்தண்டு பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், திருமணத்தை ரத்து செய்வதா என்ற குழப்பம் உருவானபோதும், இரண்டு குடும்பங்களும் திருமணத்தை ஒத்திவைக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். மருத்துவர்களின் அனுமதியுடன், அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கையிலேயே ஆவணியின் கழுத்தில் மணமகன் ஷரோன் தாலி கட்டினார். இந்த காட்சி மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் இரு குடும்பத்தாரையும் நெகிழச் செய்தது.

திட்டமிட்டபடி மண்டபத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு திருமண விருந்து பரிமாறப்பட்டது. விபத்தில் ஆவணியுடன் பயணித்த மற்ற மூன்று பேரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆவணிக்கு முதுகுத்தண்டு பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.