சத்குரு முன்னிலையில் ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள் – மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு

Spread the love

கோவை ஆதியோகி வளாகத்தில் இன்று (செப்டம்பர் 21) சத்குரு முன்னிலையில் ஈஷா கிராமோத்சவம் 2025 இறுதிப் போட்டிகள் நடை பெறுகின்றன.
இதில் மத்திய விளை யாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
முன்னதாக கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஈஷா தன்னார்வலரும் கவிஞருமான கலை
மாமணி மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு விழாவின் விவரங் களை பகிர்ந்தார்.
இது குறித்து அவர் கூறூகையில், “2004 முதல் கிராமப்புற மக்களுக்காக நடத்தப்பட்டு வரும் ஈஷா கிராமோத்சவம் இவ்வாண்டு 17-ஆவது பதிப்பு. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய பகுதிகளின் கிராம மக்கள் இதில் பங்கேற்றனர். ஆகஸ்ட் 16 முதல் நடைபெற்ற இந்த விழாவில் 183 இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 63,000-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதில் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இன்றைய இறுதிப் போட்டிகளில் 24 வாலிபால் அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் பங்கேற்கின்றன. அதோடு மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டியும் இடம்பெற உள்ளது. முன்னதாக அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. ற்றி பெறும் அணிகளுக்கு முதல் நான்கு இடங்களுக்கு முறையே ரூ. 5 லட்சம், ரூ. 3 லட்சம், ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் மூன்று நிலைகளிலும் ரூ. 67 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளுடன் சேர்த்து பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டின் வள்ளிக்கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து, கேரளாவின் பஞ்சரி மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இதனுடன் 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகள் சிறப்பு அரங்குகளில் வைக்கப்படுகின்றன.
மேலும், பொது மக்களுக்கான வண்ண கோலப் போட்டி, பல்லாங்குழி, மணி நடை, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கேளிக்கை போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து ரூ. 33,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் புடவை பரிசாக வழங்கப்பட உள்ளது.” என்றார்.