கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கடந்த 29 ஆம் தேதி கன மழை பெய்தது. இதன் காரணமாக 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அடுத்ததுடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அதனால் இங்கே ஓடும் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரை உடைத்து இரண்டாகப் பிரிந்தது அதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் புரட்டி எடுக்கப்பட்டு மண்ணுள் புதைந்தது. இதில் ஒரு தேவாலயம், ஒரு பள்ளி வாசல், கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
தாங்கள் அபாயக்கட்டத்தில் உள்ளோம் என்பதை முன்கூட்டியே அறிந்த மக்கள் பக்கத்தில் உள்ள முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். ‘பத்திரமாக இருங்கள். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்!’ என பள்ளிவாசலில் இரவு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாசலும், முகாமில் தங்கியவர்களும், ஏன் இந்த அறிவிப்பை செய்தவர்கள் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதைந்து விட்டனர் என்பதுதான் கொடுமை. இதையும் மீறி 3500 பேர் மேட்டுப்பகுதியில் உள்ள முகாமில் தங்கி தங்கள் உயிரைக் காத்துள்ளனர்.
இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 350 ஐ கடந்துள்ளது. 250 பேர் காணாமல் போன கணக்கில் வந்துள்ளனர். இந்த இயற்கை சீற்றத்தில் அடித்து செல்லப்பட்டது முக்கிய மூன்று கிராமங்கள் என்றாலும், அதற்கு மேலே இருந்த குட்டிக்குட்டி பழங்குடி கிராமங்கள் நிலைமை என்ன ஆயின என்பது தெரிவில்லை. காணாணல் போன வீடுகள் ஆயிரத்திற்கும் மேல் என்ற கணக்கில் பார்த்தால் இந்த இறப்பு எண்ணிக்கை ஆயிரங்களைக் கடக்கலாம் என்றும் புள்ளி விவரம் சொல்லுகிறார்கள் களத்தில் உள்ளவர்கள்.
நிலச்சரிவில் மண்ணில் புதைந்து கிடப்பவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவம், பேரிடர் மீட்டுப்படை, கடற்படையினர், இஸ்ரோ விஞ்ஞானிகள், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘மண்சரிவு ஆரம்பப்புள்ளியில் இருந்து 8 கிலோமீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது. இதில் 86 ஆயிரம் சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது’ என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இதன் பின்னே அரசியலும் புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளது.
‘‘இங்கே ஏற்பட்ட நிலச்சரிவுக்கும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் 2009 ஆம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வரும் அரசுகளே காரணம். இது ஒரு சோகம் அல்ல. குற்றச்செயல்!’’ என்று முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
களத்தில் ராகுல் காந்தி நேரில் சென்று பேரிடரை பார்வையிட்டு வரும் நிலையில், ‘இந்த நிலச்சரிவு துயரத்திலும் பாஜக அரசியல் செய்கிறது. பேரிடரை முன்கூட்டியே அறிந்தும் அமித்ஷா ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. செய்தி மற்றும் தகவல்களை மாநில அரசுக்கு வழங்கவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!’’ என அகில இந்திய காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த நிலச்சரிவு தொடர்பாக கேரளஅரசு அறிக்கை தர பசுமை தீர்ப்பாயம் தென்மண்டல அமர்வு உத்திரவிட்டுள்ளது. அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையில்,
‘‘நிலச்சரிவு தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் மற்றும் அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள், இதுபோன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க எடுக்க இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் குறித்த விவரங்களும் அறிக்கையில் இடம்பெற வேண்டும். வயநாடு நிலச்சரிவு விபத்தைஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நீலகிரி, கோவை மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர், தமிழக தலைமைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை செப்.9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த நிலச்சரிவுக்கு என்னதான் காரணம்? முன்கூட்டியே இதை அறிந்து மனித உயிர்களை காப்பாற்றியிருக்க முடியாதா? என்று கேட்டால் நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார் கூடலூர் விவசாயிகள் பழங்குடிகள் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் எம்.எஸ். செல்வராஜ். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் இயற்கை சூழலுக்கும், பழங்குடி மக்களுக்கும் போராடி வரும் சமூக செயல்பாட்டாளர்.
அவர் கூறுகிறார்::
‘‘இதில் இப்போது ஆளாளுக்கு குற்றம் சொல்லுகிறார்கள். அதற்கேற்ப அரசியல் ஆக்குகிறார்கள். உண்மையில் இந்தப் பேரிடர் மட்டுமல்ல, ஏற்கனவே இப்பகுதிகளில் நடந்த நிலச்சரிவுகளுக்கும், வெள்ளப்பெருக்கில் மக்கள் பாதிக்கப்பட்டதற்கும் இந்த அரசியல்வாதிகளும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மரக்கடத்தல் மாஃபியாக்களுமே காரணம்.
பாதிக்கப்பட்ட வயநாடு முண்டகை என்பது கூடலூர் சேரம்பாடியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதாவது நம் தமிழக எல்லையோரம் அமைந்திருப்பது. நாம்தான் தமிழகம் கேரளா என பிரித்து வைத்திருக்கிறோமே ஒழிய இயற்கைக்கு அது கிடையாது. இங்குள்ள செக்சன் 17 எனப்படும் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் நிலங்கள் நிலம்பூர் ஜமீன் வசம் இருந்தது. இதைத்தான் தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டி என்பார்கள்.
இந்த நிலத்தில் இல்லாத மரங்களே இல்லை. மூலிகை, செடி கொடிகளே இல்லை. வெளி மாநில வெளிநாட்டு விலங்குகளான சிங்கம், கங்காரு தவிர்த்து மற்ற எல்லா விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் இங்கே வாசம் செய்கின்றன. தென்னிந்திய நதிகள் பெரும்பான்மையாய் உற்பத்தியாகும் நீர்க்கேந்திரம் இதுதான். கணக்கில்லாத சுணைகள், ஊற்றுகள், அருவிகள். பல்லுயிர்ப் பெருக்கம் என்பது இங்கேதான் நடைபெறுகிறது.
அப்படிப்பட்ட இந்த நிலங்கள் இது தமிழகம், கேரளா பிரிக்கப்படும்போது கேரளத்திற்கு 30 ஆயிரம் ஏக்கரும், தமிழகத்திற்கு 90 ஆயிரம் ஏக்கருமாக பிரிந்தது. இந்த கூடலூர் வனப்பகுதி மேற்குத்தொடர்ச்சி விட்டு மீதி நிலங்களை வனமாக அறிவித்திருக்க வேண்டும். கேரள அரசு அதை செய்து விட்டது. ஆனால் தமிழகப்பகுதிகளில் இந்த நிலங்களில் பல்லாயிரக்கணக்காகன ஏக்கரை வைத்திருக்கும் மஞ்சுஸ்ரீ எஸ்டேட் உள்ளிட்ட பத்துப் பதினைந்து எஸ்டேட்டுகள் 99 வருட குத்தகையை காட்டி, அரசியல் செய்து வந்தது.
தவிர அதை எடுக்கப் போகும்போதெல்லாம் பொதுமக்களை தூண்டி விட்டு போராட்டங்களும் செய்தது. இந்தப் பொதுமக்கள் மாநில எல்லைகள் பிரிக்கப்படும்போது சில ஆயிரங்களே இருந்தனர். பின்னர் பல்லாயிரங்களாக பல்கிப் பெருகி விட்டனர். அதற்குக் காரணம் கேரளப் பகுதிகளிலிருந்து நிலம்பூர் ஜமீன் போலி பத்திரங்களை தயார் செய்து கொண்டு இங்கே வந்து குடியேறியவர்கள், அதை மற்றவர்க்கு கைமாற்றிச் சென்றனர்.
இதன் பின்னே எழுந்த நிர்வாகச்சிக்கல் காரணமாக இவர்களுக்கெல்லாம் பட்டா கொடுத்து காடுகளை காடுகளாக அறிவித்திருந்தால் கூட 50 ஆயிரம் ஏக்கர் காடுகள் மிஞ்சியிருந்திருக்கும். அப்படி அரசுகள் செயல்படவில்லை. இதன் பின்னணியில் கேரளத்திலிருந்து வந்த மரக்கடத்தல்காரர்கள் தினம் தினம் மரங்களை வெட்டிக் கடத்திக் கொண்டே இருந்தனர். கல்குவாரிகள், மணல் திருட்டும் நடந்தது. இவையெல்லாம் கேரளாவிற்கே கடத்தப்பட்டது.
இப்படி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் லட்சக்கணக்கான டன் மரங்கள் சென்றன. ஒரு மரம் மட்டும் 18 நாட்கள் அறுத்து ஒரே ஒரு டிரக்கில் கொண்டு போன காட்சி கூட அரங்கேறியது. அந்த அளவு அது பெரிய மரம், முழு மரமாகச் சென்றால்தான் நல்ல விலை கிடைக்கும் என்றே அப்போது அதைச் செய்தார்கள் அதைச் செய்தவருக்கு இருந்த ஆளுங்கட்சி அரசியல் பின்னணி அப்படி. நாம் வெட்டுவது தமிழ்நாட்டு மரங்களைத்தான் என்ற எண்ணம் இந்த கேரள மாஃபியாக்களுக்கு இயல்பாகவே ஊறி விட்டது. ஆனால் இயற்கை அப்படிப் பார்க்குமா?
இங்கே சிறகடிக்கும் பட்டாம்பூச்சிக்கு பாதிப்பு வந்தால் ருஷ்யாவில் சூழல் கெடும் என்ற ஒரு வாசகம் உண்டல்லவா? அதுபோலத்தான் தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டி எனப்படும் கூடலூர் பகுதிகளில் வெட்டப்பட்ட கோடிக்கணக்கான மரங்கள், மக்கள் ஏற்படுத்திய இயற்கை சீர்கேடுகள் இப்போது இங்கே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது அரசியல்வாதிகள், இயக்கவாதிகள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பேச மாட்டார்கள். அந்த அளவுக்கு அதில் செல்வாக்குள்ளவர்கள் இருக்கிறார்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பார்கள். மரக்கொள்ளை மாஃபியாக்கள் செய்த ஆட்டத்தால் இப்படி அப்பாவி மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கிறார்கள்!’’ என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
Leave a Reply