மூன்றாண்டுகள் புறக்கணித்த நிதி ஆயோக் கூட்டத்தில் தற்போது கலந்து கொள்வது ஏன்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

edappadi palanisamy
Spread the love

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தார்.

“முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்து வந்தார். தமிழகத்திற்கு நிதி கிடைக்கவில்லை என்றும், திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறி பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது, மூன்று வருடங்களுக்குப் பிறகு நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்திருக்கிறார். இதன் காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

“அந்த மூன்று ஆண்டுகளில் கலந்து கொண்டு இருந்தால் தமிழகத்திற்கு தேவையான நிதி, திட்ட அனுமதிகள், நிலுவைத் தொகைகள் கிடைத்திருக்கும். மாநில பிரச்சனைகள் குறித்து நேரடியாக தெரிவிக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், மக்கள் நலனை சிந்திக்காத முதல்வர் என்பதையே இது நிரூபிக்கிறது,” என்றார்.

அரசின் ஊழல், பாதுகாப்பு குறைபாடு குறித்து குற்றச்சாட்டு

மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தற்போது நிலவுகிறது என அவர் தெரிவித்துள்ளார். “தச்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது, நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம்,” என்றார்.

அரக்கோணம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, “சம்பவங்கள் நடந்த பிறகே போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். சில நேரங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில் தாமதம், குற்றவாளிகளுக்கு முன்ன்ஜாமீன் கிடைக்க உதவி போன்ற நிகழ்வுகள் உள்ளன,” என்று குற்றம்சாட்டினார்.

அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி, அவரின் புகார், காவல்துறையின் செயல்பாடு உள்ளிட்டவை மிக மோசமான நிலையில் உள்ள காவல்துறை நிர்வாகத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

போதைப்பொருள் பரவலுக்கும் கடும் கண்டனம்

“போதைப் பொருள்கள் உள்ளாட்சி மட்டத்தில் பரவி வருகிறது. இளைஞர்கள் அதற்குள் சிக்கி பல குற்றங்களை செய்கிறார்கள். அரசு இதை கட்டுப்படுத்தும் முயற்சி எடுக்கவில்லை. அரசுக்கு நாங்கள் முன்பே எச்சரிக்கை கொடுத்தோம்,” என்றார்.

முக்கிய அரசியல் விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரதமர் வருகைக்கு கருப்பு பலூன் விட்டார். ஆனால் தற்போது, வெள்ளைக் கொடி பிடிக்கிறார். இது தி.மு.க-வின் இரட்டை முகம் என்பதை காட்டுகிறது,” என்றார்.

பட்டாசு தொழிலில் பாதுகாப்பு குறித்து கேட்டோம் – அரசு முயற்சி செய்யவில்லை

“பட்டாசு தொழில் மிகவும் அபாயகரமானது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். ஆனால், அரசு முன்னெச்சரிக்கையாக எதையும் செய்யவில்லை. சட்டமன்றத்தில் பேசியும் கேட்டும் பயனில்லை,” என தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு, அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை

“எஸ்.பி. வேலுமணி மீது கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை. அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருக்கிறது,” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அமலாக்கத்துறை விசாரணை – நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து பார்க்க வேண்டும்

“உயர்நீதிமன்றம் விசாரணை தொடரலாம் என கூறியுள்ளது. அமலாக்கத்துறை பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு இருப்பதால் இதைப் பற்றிய மேலதிக விவரங்களை பேச இயலாது,” என தெரிவித்தார்.

முடிவில், “இனிமேலும் இந்த அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக செயல் பட வேண்டும்,” என்றார்.