கோவையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால் திமிருடன் பேசுகிறாயா எனக் கேட்டு தனது காலணியை துடைக்க வைத்ததாக அரசு பள்ளி ஆசிரியை மீது மாணவி புகார் அளித்துள்ளார்.
கோவை துடியலூர் அசோகபுரம் அரசு மேல் நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி கோவை மணிக்கூண்டு பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் அபிநயா, மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இது குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியர் அபிநயா அந்த மாணவியிடம் சக மாணவர்கள் முன்பு வகுப்பறையில் கேட்டு உனது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி மாட்டு இறைச்சி கடை வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கு ஆசிரியை அபிநயா மாட்டுக்கறி சாப்பிடுவதால் திமிருடன் பேசுகிறாயா என்று கூறி மாணவியின் கன்னத்தில் அடித்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் முறையிட்ட போது அவர் எங்களை மிரட்டுகிறீர்களா என்று கூறியதாகவும், மாட்டுக்கறி சாப்பிடுவாயா என்று சக மாணவிகள் முன்பு கேட்டு தனது காலணியை துடைக்க வைத்தாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையினர் விசாரித்து அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் பொழுது மிரட்டும் சம்பவம் மீண்டும் நடைபெற்றதால் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக கூறினர்.
Leave a Reply