கோவையில் கடந்த 22 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற தங்க நகைப்பட்டறை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் பணியாளர் சாந்தகுமார் ஆகிய இருவரை காரில் வந்த மர்ம கும்பல் தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இச் சம்பவத்தில் நகை பட்டறையைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமாரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சம்பவத்தில் காவல்துறை மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து அமைச்சர் எஸ். பி.வேலுமணி பேட்டி அளிக்கையில், “கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மோசமான சம்பவம் இப்பகுதியில் நடந்துள்ளது.
காந்திபார்க், செல்வபுரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தங்க நகை கடை பட்டறைகள் குடிசை தொழில் போல ஏராளமாக உள்ளது. நகைக்கடை உரிமையாளர்களிடம், தங்கத்தை வாங்கி ஆர்டரை பெற்று அவர்கள் விரும்பும் வடிவத்தில் நகையாக செய்து கொடுக்கும் பணிகளை இங்குள்ள மக்கள் தொழிலாக செய்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கூலி மட்டுமே கிடைக்கும்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி செல்வபுரத்தை சேர்ந்த பட்டறை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் பணியாளர் சாந்தகுமாரும் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் நகைகளை எடுத்துக்கொண்டு சென்றபோது காரில் வந்த மர்ம கும்பல் திட்டமிட்டு இருவரையும் வீச்சரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை பறித்து சென்றனர்.
வீச்சரிவாள், இரும்பு கம்பிகளால் தாக்கி நகையை பறிக்கும் மோசமான கலாச்சாரம் கோவையில் ஏற்பட்டுள்ளது. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தங்க நகை பட்டறை தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். இந்த அரசு தான் அதற்கு பொறுப்பு. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நகைப்பட்டறையை சேர்ந்தவர்கள் ஒரு வருட காலத்திற்கு பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு கூலி மட்டுமே என்ற சூழ்நிலையில் அவர்கள் ஒரு வருட காலத்திற்கு பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை பார்க்கும்போது வருத்தம் அளிக்கிறது. இச்சம்பவத்தில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டுக் கொடுத்து, இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும். அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட வேண்டும்..
கொரோனா காலத்தின் போது நகை பட்டறை தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களும், தொழிலாளர்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரத்தை இழந்திருந்த அவர்கள் தற்போது தான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றனர்.
ஆகவே காவல்துறை வேகமாக இயங்கி பறிபோன நகைகளை மீட்டெடுத்து ஒப்படைக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் உள்ள ஆர் எஸ் புரம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவிலேயே நம்பர் ஒன் காவல் துறை என்ற பெயர் பெற்றது.
இன்று காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. கோவையில் காவல்துறை சுயமாக இயங்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் வயதானவர்களை தாக்குதல் தாக்கி நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது. அதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இனியும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதிமுக சார்பில் போராட்டத்தில் இறங்குவோம். ” என்று எச்சரித்தார்.
Leave a Reply